Sunday, June 16, 2024
Home » பிரபல திரைப்பட பாணியில் பெண்களுடன் உல்லாசமாக இருப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய கும்பல் கைது: 2 கார்கள், 3 செல்போன்கள், ஆயுதங்கள் பறிமுதல்

பிரபல திரைப்பட பாணியில் பெண்களுடன் உல்லாசமாக இருப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய கும்பல் கைது: 2 கார்கள், 3 செல்போன்கள், ஆயுதங்கள் பறிமுதல்

by Karthik Yash

பழநி: பிரபல திரைப்பட பாணியில் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி, அவர்களுடன் உல்லாசமாக இருப்பவர்களை வீடியோ எடுத்து, மிரட்டி பணம் பறித்த 5 பேர் கும்பல் கைது செய்யப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரத்தை சேர்ந்த 35 வயது ஆணுக்கும் மற்றும் திண்டுக்கல் அருகே சின்னாளபட்டியை சேர்ந்த திருமணமான 24 வயது பெண்ணுக்கும் செல்போன் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தனிமையில் சந்திக்க முடிவு செய்து பழநி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் லாட்ஜில் அறை எடுத்து தங்கினர். அப்போது கதவை தட்டும் சத்தம் கேட்டு திறந்தபோது 3 ஆண்கள், ஒரு பெண் அதிரடியாக நுழைந்து, சின்னாளபட்டி பெண்ணுடன் உல்லாசமாக இருப்பது போல செல்போனில் போட்டோ மற்றும் வீடியோ எடுத்துள்ளனர்.

தொடர்ந்து அந்த நபரை அடித்து உதைத்து ரூ.10 ஆயிரம், செல்போனை பறித்துள்ளனர். இதுபற்றி வெளியில் சொன்னால் வீடியோவை, இணையதளத்தில் வெளியிட்டு விடுவோம் என மிரட்டி அனுப்பி உள்ளனர். அதன்பின் கடந்த 4 நாட்களுக்கு முன்பு அந்த நபரின் செல்போனில் பதிவு செய்திருந்த அவரது தம்பியின் செல்போன் எண்ணிற்கு அழைத்து பேச வேண்டுமென கூறியுள்ளனர். அவரது தம்பியும் செல்போனை அண்ணனிடம் கொடுத்துள்ளார். மேலும் பணம் தராவிட்டால் வீடியோவை செல்போனில் உள்ள உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் அனுப்பி விடுவோமென மிரட்டி உள்ளனர்.

இதில் அதிர்ச்சியடைந்த அந்த நபர் பழநி டவுன் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தினர். இந்நிலையில் உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சண்முகநதி அருகே சந்தேகப்படும்படி வந்த 2 கார்களை நேற்று முன்தினம் நள்ளிரவு போலீசார் மடக்கினர். அதிலிருந்த 2 பெண்கள் உள்பட 5 பேரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் சின்னாளபட்டியை சேர்ந்த 24 வயது பெண், திண்டுக்கல் அருகே சீலப்பாடியை சேர்ந்த 25 வயது பெண், பாலகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த குணசேகரன் (40), நத்தம் பாலமுருகன் (37), திண்டுக்கல் லோகநாதன் (28) என்பதும், ரெட்டியார்சத்திரத்தை சேர்ந்த நபரிடம் பணம் பறித்த கும்பல் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் 5 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 கார்கள், 3 செல்போன்கள் மற்றும் கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பிடிபட்ட காரில் ஒன்று கொடைக்கானலில் திருடப்பட்டது என்பதும், இந்த 2 பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபட வைத்து இக்கும்பல் பழநி, கொடைக்கானலில் பலரிடம் பணம் பறிப்பு செயல்களில் ஈடுபட்டிருப்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. பச்சைக்கிளி முத்துச்சரம் எனும் பிரபல தமிழ் திரைப்படத்தை போல், பெண்களை வைத்து பணம் பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் பழநி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

You may also like

Leave a Comment

20 − four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi