சென்னை: அரசு விரைவுப் பேருந்துகளில் பொங்கல் பண்டிகைக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை அடுத்த மாதம் 15ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. ஜனவரி 14 ம் தேதி போகி பண்டிகை தொடங்கி, ஜனவரி 15ம் தேதி பொங்கல், 16-ல் மாட்டுப்பொங்கல், 17-ல் காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட, ஆண்டுதோறும் சென்னையில் இருந்து லட்சக்கணக்கானோர் செல்வது வழக்கம். அதனை கருத்தில் கொண்டு, பொதுமக்களின் வசதிக்காக, அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் செல்பவர்களுக்கு அரசு விரைவுப் பேருந்துகளில் பயணிப்பதற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. போகி பண்டிகைக்கு முதல் நாளான ஜனவரி 13ம் தேதி சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள் நேரிலும், டிக்கெட் முன்பதிவு மையத்திலும், www.tnstc.in மற்றும் tnstc செயலி வாயிலாகவும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என போக்குவரத்து துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்ல ஏதுவாக அரசு விரைவு பேருந்துகள் மட்டுமின்றி சிறப்பு பேருந்துகளை இயக்கவும் தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.