Saturday, July 27, 2024
Home » பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை எதிரொலி விமான டிக்கெட் கட்டணம் பன்மடங்கு உயர்வு: பயணிகள் அதிர்ச்சி, சென்னை – மதுரை ரூ.17,262

பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை எதிரொலி விமான டிக்கெட் கட்டணம் பன்மடங்கு உயர்வு: பயணிகள் அதிர்ச்சி, சென்னை – மதுரை ரூ.17,262

by Ranjith

சென்னை: பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை காரணமாக விமான டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை வரும் திங்கள்கிழமை முதல் புதன்கிழமை வரை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் சனி (நேற்று), ஞாயிறு (இன்று), பொங்கல் விடுமுறை என 5 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வாசிப்பவர்கள், தங்களுடைய சொந்த ஊர்களுக்கு சென்று பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட முடிவு செய்து, லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால் பஸ் மற்றும் ரயில் நிலையங்களில் கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம் காணப்படுகிறது. இதில் பஸ் மற்றும் ரயிலில் முன்பதிவு செய்ய முடியாதவர்கள், இறுதி நேரத்தில் சொந்த ஊர் செல்ல முடிவு செய்தவர்கள், விமான பயணங்களை மேற்கொண்டுள்ளனர். இதனால் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து, தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, சேலம் ஆகிய நகரங்களுக்கு செல்லும் விமானங்களில் கடந்த ஓரிரு நாட்களாகவே பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. அதிலும் நேற்று பயணிகள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது.

இந்நிலையில் சென்னையில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு செல்லும் உள்நாட்டு விமானங்களில், டிக்கெட் கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்து உள்ளன. இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் வேறு வழியில்லாமல், கூடுதல் கட்டணங்கள் செலுத்தி விமானங்களில் பயணிக்கின்றனர். அதே நேரத்தில் டிக்கெட் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளதால் உடனடியாக ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர்.

சென்னை – தூத்துக்குடி வழக்கமான கட்டணம் ரூ.3,624 நேற்று கட்டணம் ரூ.13,639. சென்னை – மதுரை வழக்கமான கட்டணம் ரூ.3,367 நேற்று ரூ.17,262. சென்னை – திருச்சி வழக்கமான கட்டணம் ரூ.2,264 நேற்று ரூ.11,369. சென்னை – கோவை வழக்கமான கட்டணம் ரூ.3,315 நேற்று ரூ.14,689. சென்னை – சேலம் வழக்கமான கட்டணம் ரூ.2,290 நேற்று ரூ.11,329 வரை கூடுதல் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதேபோல் பல மடங்கு கட்டண உயர்வு இருந்தாலும், டிக்கெட் கிடைக்காமல் பலர் தவிக்கின்றனர். எனவே விழாக்காலங்களில், சிறப்பு ரயில்கள், பஸ்கள் போல், முக்கிய நகரங்களுக்கு சிறப்பு விமானங்கள் இயக்க பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

You may also like

Leave a Comment

3 + six =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi