சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது வால்பாறை எம்எல்ஏ அமுல் கந்தசாமி(அதிமுக): கேரள எல்லை வரை விரிந்துள்ள வால்பாறை தொகுதியில் பாலிடெக்னிக் கல்லூரிக்கு, 100 கி.மீ பயணித்து செல்ல வேண்டியதுள்ளது. இதனால் ஏழை, எளிய தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குழந்தைகள் படிப்பதற்கு சிரமப்படுகிறார்கள். எனவே பாலிடெக்னிக் கல்லூரி அமைக்க வேண்டும்.
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி: திமுக ஆட்சியில் 2006ல் வால்பாறை தொகுதியில், அரசு கலை கல்லூரி தொடங்கப்பட்டது. ஆனாலும் அங்கும் பல இடங்கள் காலியாக உள்ளது. பாலிடெக்னிக் கல்லூரிகளை பொறுத்த வரை, கடந்த 2010-11ல் அப்போதைய திமுக ஆட்சி காலத்தில் 1,16,687 பேர் பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்ந்தனர். ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து, 2020ல் 59,350 ஆக குறைந்தது. திமுக ஆட்சி பொறுப்பேற்று 2 ஆண்டுகளில், நான் முதல்வன், புதுமைப்பெண் ஆகிய திட்டங்களை செயல்படுத்தி வருவதால், 2 ஆண்டுகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து 2022ல் 1,20,090 மாணவர்கள் பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்ந்துள்ளனர்.
மேலும் தொழில் துறை 4.0 தரத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளை தரம் உயர்த்த வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி அனைத்து கல்லூரிகளிலும் தரம் உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தமிழ்நாட்டில் உள்ள 54 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் ரூ.618 கோடி வரை வருடத்திற்கு செலவாகிறது. உறுப்பினரின் கோரிக்கை குறித்து நிதி நிலைமைக்கு ஏற்ப பரிசீலிக்கப்படும்.