ஊட்டி: நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள அணிக்காடு பகுதியை சேர்ந்த சசிகலா (26) குடும்ப தகராறு காரணமாக கடந்த ஓராண்டுக்கு முன் கணவரை பிரிந்து சித்தி வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில், சசிகலாவுக்கும் மஞ்சூர் அருகேயுள்ள சிவசக்தி நகரை சேர்ந்த ஊட்டி போக்குவரத்து போலீஸ்காரராக கண்ணன் (31) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியது. இதனால் இருவரும் நெருங்கி பழகி வந்தார்.
இந்த சூழலில் சசிகலாவை ஏமாற்றி கடந்த 23ம் தேதி வேறு ஒரு பெண்ணுடன் கண்ணனுக்கு திருமணம் நடந்தது. இதை தடுக்க முயன்றும் சசிகலாவால் முடியாததால் அவர் கடந்த 21ம் தேதி விஷம் குடித்தார். கோவையில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சசிகலா 22ம் தேதி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சசிகலாவின் உறவினர்கள் அளித்த புகாரின்பேரில் மஞ்சூர் போலீசார் வழக்குப்பதிந்து போலீஸ்க்காரர் கண்ணனை கைது செய்து ஊட்டி சிறையில் அடைத்தனர்.