சென்னை மதுரவாயல், வானகரம், வேலப்பன்சாவடி, மற்றும் பூந்தமல்லி நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சமீப காலமாக அடிக்கடி சாலை விபத்துகளில் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. குறிப்பாக நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் இரண்டு விபத்துகளில் இருவர் அடுத்தடுத்து பலியாகினர். இந்த பகுதிகளில் அதிக அளவில் விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்படுவதால் அதனை தடுக்க போக்குவரத்து போலீசார் பல்வேறு வழிமுறைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், புதிய முயற்சியாக போக்குவரத்து போலீசார் தங்களது வாகனத்தில் திருநங்கை ஒருவரை ஏற்றிக்கொண்டு அடிக்கடி விபத்து நடந்து உயிரிழப்பு ஏற்படும் பகுதியான வானகரத்தில் பூசணிக்காய் மற்றும் எலுமிச்சம்பழம் சுற்றி திருஷ்டி சுற்றி போடும் பணியில் ஈடுபட்டனர். இதற்காக திருநங்கை ஒருவரை போக்குவரத்து போலீசார் போலீஸ் வாகனத்திலேயே ஏற்றிச் சென்று எந்தெந்த பகுதியில் எல்லாம் சாலை விபத்தில் உயிரிழப்புகள் ஏற்படுகிறதோ அங்கெல்லாம் சென்று பூசணிக்காய் மற்றும் எலுமிச்சம்பழம் சுற்றிப் போட்டனர். இதை வாகன ஓட்டிகள் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.
அதிரடி சஸ்பெண்ட்: திருநங்கையை வைத்து திருஷ்டி சுற்றிய வீடியோ வைரலானதை தொடர்ந்து மதுரவாயல் போக்குவரத்து போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பழனியை காவல் கட்டுப்பாடு அறைக்கு மாற்றம் செய்து போக்குவரத்து போலீஸ் கூடுதல் ஆணையர் கபில் குமார் சரத்கர் உத்தரவிட்டார்.