சென்னை: ‘பர்ஹானா’ திரைப்படம் விவகாரம் தொடர்பாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் கடந்த 12ம் தேதி ‘பர்ஹானா’ திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முஸ்லிம் குடும்பத்தில் பிறந்த அவர், வறுமை காரணமாக கால் சென்டருக்கு வேலைக்கு செல்கிறார். இதற்கு இஸ்லாமிய அமைப்புகள் சிலர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன. இந்த திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் மத உணர்வுகளுக்கு எதிராக இருப்பதாக கூறி நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர். ஆனால் அந்த காட்சிகள் எதுவும் நீக்கப்படாமல் திரைப்படம் கடந்த 12ம் தேதி முதல் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. எனவே, இந்த திரைப்படத்தை தடை செய்ய கோரி இஸ்லாமிய அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.
மேலும், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்க்கும் அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதைதொடர்ந்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று சில அமைப்புகள் அறிவித்துள்ளன. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தி.நகர் சிவசைலம் தெருவில் வசித்து வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வீட்டிற்கு நேற்று முதல் எஸ்ஐ தலைமையில் 2 போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். சுழற்சி முறையில் பாதுகாப்பு பணி மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வசித்து வரும் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபடவும் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் யாரேனும் அப்பகுதியில் நடமாடினால் அவர்களை பிடித்து விசாரணை நடத்தவும் போலீசாருக்கு உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.