சென்னை: போக்சோ கைதி தப்பி ஓடிய வழக்கில், பெண் காவலர் உட்பட 2 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் செந்தில்ராஜா(45). இவர் கோயம்பேட்டில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். இவரது அலுவலகத்தில் பணியாற்றிவந்த அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். புகாரின்பேரில், கடந்த 4 மாதத்துக்கு முன்பு கோயம்பேடு அனைத்து மகளிர் போலீசார் செந்தில்ராஜாவை போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு தொடர்பாக, செந்தில்ராஜா மற்றும் சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்ய முடிவு செய்து, கடந்த இரண்டு தினங்களுக்கு முன் புழல் சிறையில் இருந்து செந்தில்ராஜாவை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.
அப்போது கழிவறைக்குள் சென்றுவருவதாக கூறி விட்டு சென்ற செந்தில்ராஜா, போலீசார் கண்ணில் மண்ணை தூவிவிட்டு, தப்பிச்சென்றார். இந்நிலையில், போக்சோவில் கைதி தப்பிச் சென்றது தொடர்பாக, மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், பாதுகாப்புக்கு சென்ற போலீசார் லாவண்யா, கோயம்பேடு காவலர் சுரேஷ் ஆகிய 2 பேரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். செந்தில்ராஜாவை பிடிக்க தனிப்படை போலீசார் ஆந்திராவுக்கு விரைந்துள்ளனர்.