புதுடெல்லி; டெல்லியில் ஒன்றிய அமைச்சர் நடந்த தமிழ் புத்தாண்டு விழாவில் பிரதமர் மோடி பேசினார். தமிழ் புத்தாண்டு விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு டெல்லியில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் தமிழ் புத்தாண்டு விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் வேட்டி சட்டை அணிந்து பிரதமர் மோடி கலந்து கொண்டார். மேலும் ஒன்றிய அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டனர். மேலும் தமிழ் நாட்டில் இருந்தும் பலர் சென்று விழாவில் பங்கேற்றனர். இந்த விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என கூறி பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது: உலகின் பழமையான மொழி தமிழ். இதில் ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட வேண்டும். தமிழ் இலக்கியம் பரவலாக மதிக்கப்படுகிறது.
தமிழ் திரையுலகம் மிகச் சிறந்த படைப்புகளை வழங்கியுள்ளது. இந்தியா உலகின் பழமையான ஜனநாயகம், இது ஜனநாயகத்தின் தாய். இதற்கு ஏராளமான வரலாற்று குறிப்புகள் உள்ளன.
ஒரு நாடாக இந்த கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்வது நமது பொறுப்பு. ஆனால் முன்பு என்ன நடந்தது என்பதை நாம் அனைவரும் அறிவோம். இப்போது எனக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவை ஒரு தேசமாக வடிவமைத்தது தமிழ் கலாச்சாரத்தில் நிறைய இருக்கிறது. தமிழ் கலாச்சாரமும் மக்களும் நிரந்தரமானவர்கள் மற்றும் உலகளாவியது. சென்னை முதல் கலிபோர்னியா வரை, மதுரை முதல் மெல்போர்ன் வரை, கோவை முதல் கேப் டவுன் வரை, சேலத்தில் இருந்து சிங்கப்பூர் வரை, தங்கள் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை கொண்டு சென்ற தமிழ் மக்களை நீங்கள் காணலாம்.
அதனால் தான் பொங்கலாகட்டும், புத்தாண்டாகட்டும், அவை உலகம் முழுவதும் கொண்டாப்படுகின்றன. இந்த புத்தாண்டு மூலம் புதிய ஆற்றலை பெறும் பழங்கால தமிழ் கலாச்சாரம், பாரம்பரியம் உண்மையிலேயே ஆச்சரியமாக இருக்கிறது. இது தமிழ்நாட்டையும், தமிழ் மக்களையும் மிகவும் சிறப்படையச் செய்கிறது. அதனால்தான் நான் இந்த தமிழ் பாரம்பரியத்தை விரும்பினேன். அதில் மயங்கினேன். மேலும் இதன் மீது உணர்ச்சிப்பூர்வமான பற்றையும் கொண்டிருந்தேன். இவ்வாறு அவர் பேசினார்.
தமிழ் கல்வெட்டில் தகுதி நீக்கம்
மோடி பேசும் போது, ‘‘தமிழ்நாட்டின் உத்திரமேரூரில் 1100-1200 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு உள்ளது. அங்கு நாட்டின் ஜனநாயக விழுமியங்களை அறியலாம். அங்கு கிடைத்த கல்வெட்டில் கிராமசபைக்கு தேர்தல் நடத்தும் விதிமுறைகள் இடம் பெற்று உள்ளது. இதில் அவையை எப்படி நடத்த வேண்டும், உறுப்பினர்களின் தகுதி என்ன, உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் முறை என்ன என கூறப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல, அந்த காலத்திலேயே ஒரு உறுப்பினரை எவ்வாறு தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்பதை அவர்கள் முடிவு செய்திருந்தனர்’’ என்றார்.