சென்னை: வேலை நிறுத்தம் தொடர்பாக அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு இடையே நேற்று 6ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் பணியில் உள்ள தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள அகவிலைப்படி தொகையை ஓரிரு நாட்களில் ஒவ்வொரு மாதமும் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். பழைய ஓய்வுதிய திட்டம், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், அரசு போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கின.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில் 5ம் கட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. தொழிலாளர் தனி இணை ஆணையர் ரமேஷ் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் இளங்கோவன், மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ், மற்றும் இதர போக்குவரத்துக் கழகங்களின் அதிகாரிகள் மற்றும் 27 தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர். முதல்முறையாக மதுரை போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆறுமுகம் பங்கேற்றார்.
இந்த பேச்சுவார்த்தையில் போக்குவரத்து கழகங்களில் ஏற்படும் வரவு செலவு வித்தியாசத்தொகை அரசு நிதி ஒதுக்குவது தொடர்பாக அரசின் பரிசீலனையில் உள்ளது. காலி பணியிடங்கள் பூர்த்தி செய்வதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, வாரிசுதாரர்கள் பணி நியமனம் தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது. ஓய்வுக்கால பணப்பலன் அந்தந்த மாதம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பணியில் உள்ள தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள அகவிலைப்படி தொகையை ஓரிரு நாட்களில் ஒவ்வொரு மாதமும் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அடுத்த கட்ட பேச்சுவார்த்தை மார்ச் 6ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.