சென்னை: கச்சா எண்ணெய் விலை குறைந்த பிறகும், பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் கற்பனைக்கு எட்டாத வகையில் மக்கள் பணத்தை மோடி அரசு கொள்ளை அடிக்கிறது என்று கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டினார்.
தென் சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் சார்பில், இந்திய ஒற்றுமை நடைபயண வெற்றி விழா மற்றும் ராகுல்காந்தியின் 54வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் விருகம்பாக்கம் எம்.ஜி.ஆர். நகர் மார்க்கெட் அருகே நடந்தது. தென்சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் தலைவர் எம்.ஏ.முத்தழகன் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் இல.பாஸ்கர், பொருளாளர் ஏ.எஸ்.ஜார்ஜ் வரவேற்றனர். கூட்டத்தில், மூத்த தலைவர்கள் திருநாவுக்கரசர், கிருஷ்ணசாமி, தங்கபாலு, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, ஜெயக்குமார் எம்பி., துரை சந்திரசேகர் எம்எல்ஏ, மாநில பொதுச் செயலாளர்கள் தளபதி பாஸ்கர், சிரஞ்சீவி, எஸ்.ஏ.வாசு, மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், ரஞ்சன் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசியதாவது: நடிகை குஷ்பு குறித்து நான் பேசியவை வைத்து, அறிவற்றவர்கள், மூடர்கள், சட்டம் தெரியாதவர்கள் என்றெல்லாம் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பெண்கள் ஆணையத்தின் உறுப்பினராக இருக்கும் குஷ்பு சுயமாக வழக்குப்பதிவு செய்திருக்கலாம். இல்லை என்றால் குறைந்தபட்சம் கண்டனமாவது எனக்கு தெரிவித்திருக்கலாம். குஷ்புவின் பேச்சு தான் தவறு, அவரது சிந்தனை தவறு, நடவடிக்கை தவறு. அவர் திமுகவிலும், காங்கிரஸ் கட்சியிலும் இருந்த போது அவருக்கு இருந்த அறிவு, தெளிவு பாஜவுக்கு சென்ற பிறகு இல்லை. நாடாளுமன்ற தேர்தல் முன்கூட்டியே வந்தாலும், மகாபாரதத்தில் தேதி குறித்து வாங்கி சென்ற கவுரவர்கள் தோல்வி அடைந்தது போன்று இந்த தேர்தலில் பாஜவினரும் தோல்வி அடைவார்கள். எனவே, ராகுல்காந்தியின் பிறந்த நாளில் சூளுரை ஏற்று தேர்தலுக்கு நாம் தயாராக வேண்டும். இவ்வாறு பேசினார்.