திருவனந்தபுரம்: கேரள சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சில மசோதாக்களுக்கு அம்மாநில கவர்னர் ஆரிப் முகம்மது கான் நீண்ட காலமாக ஒப்புதல் அளிக்காமல் இருந்தார். இதையடுத்து கவர்னருக்கு எதிராக கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தது. அந்த மனுவை பரிசீலித்த உச்சநீதிமன்றம், மசோதாக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கவர்னருக்கு உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து ஒரு சில மசோதாக்களில் மட்டும் கையெழுத்து போட்ட கவர்னர், 7 மசோதாக்களை ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தார். இதில் மூன்றில் மட்டும் கையெழுத்து போட்ட ஜனாதிபதி திரவுபதி முர்மு 4 மசோதாக்களுக்கு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. இந்நிலையில் ஜனாதிபதியின் நடவடிக்கைக்கு எதிராக கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் ஒரு ரிட் மனு தாக்கல் செய்துள்ளது.
அதில் நேரடியாக ஜனாதிபதியை குறிப்பிடவில்லை என்றாலும், ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் கவர்னர் ஆரிப் முகம்மது கான் ஆகியோரது பெயர்கள் மனுவில் சேர்க்கப்பட்டுள்ளன. ஜனாதிபதிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படுவது ஒரு அசாதாரணமாக நடவடிக்கையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.