Sunday, May 19, 2024
Home » அப்பீல் மனு நிராகரிப்பு ராகுல் மன்னிப்பு கேட்க இன்னும் அவகாசம் உள்ளது: பா.ஜ கருத்து

அப்பீல் மனு நிராகரிப்பு ராகுல் மன்னிப்பு கேட்க இன்னும் அவகாசம் உள்ளது: பா.ஜ கருத்து

by MuthuKumar

புதுடெல்லி: ராகுல் மன்னிப்பு கேட்க இன்னுமும் அவகாசம் உள்ளது என்று பா.ஜ கருத்து தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக டெல்லியில் பாஜ தேசிய செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறுகையில்,‘‘ராகுல் மனுவை சூரத் நீதிமன்றம் நிராகரித்து விட்டது. நீதிமன்றத்தின் தீர்ப்பு காந்தி குடும்பத்தின் மீது குறிப்பாக ராகுல் காந்தியின் ஆணவத்திற்கு விழுந்த அடி. பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைத் தவறாகப் பயன்படுத்தி தப்பித்துவிடலாம் என்று காந்தி குடும்பம் நினைத்தது. ஆனால் அது நடக்கவில்லை. சட்டம் அனைவருக்கும் சமம் என்பதை நீதிமன்றத்தின் தீர்ப்பு நிரூபித்துள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம், ஒரு விஷயம் தெளிவாகிறது.

இந்த நாட்டில் அரசியலமைப்பின் ஆட்சி உள்ளது. ஒரு குடும்பத்தின் ஆட்சி அல்ல. இங்கு எந்த குடும்பத்திற்கும் முன்னுரிமை அளிக்க முடியாது. இந்த தீர்ப்பு இந்தியாவில் உள்ள சாமானிய மக்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் வெற்றி. இது நீதித்துறையின் மகத்தான வெற்றியாகும். இந்த தீர்ப்பால் நாட்டில் பண்டிகை சூழல் நிலவுகிறது. எவ்வளவு அழுத்தமான அரசியலை செய்தாலும் நாங்கள் வளைய மாட்டோம் என்று இன்று நீதித்துறை கூறியுள்ளது. இன்று, இரண்டு அமைப்புகள் தோற்கடிக்கப்பட்டுள்ளன. ஒன்று காந்தி குடும்பத்தின் ஆணவம், இன்னொன்று காந்தி குடும்பத்தைப் பாதுகாப்பதற்காக தெருக்களில் இறங்கிய ஒட்டுமொத்த அமைப்பு. காந்தி குடும்பத்தின் ஆணவத்தை பாதுகாப்பதற்காக இந்தச் சூழல் அமைப்பில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள சில பெரிய மனிதர்கள் உள்ளனர்.

அவதூறு வழக்கில் தீர்ப்பு வழங்குவதற்கு முன், விசாரணை நீதிமன்றம் மன்னிப்பு கேட்க ஒரு வாய்ப்பை வழங்கியது. ஆனால் ராகுல் மன்னிப்பு என்ற வார்த்தை அவரது அகராதியில் இல்லை என்று கூறிவிட்டார். ராகுல், நீங்கள் ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டு விட்டீர்கள். எனவே மன்னிப்பு என்ற வார்த்தை உங்கள் அகராதியில் இல்லை என்று சொல்லாதீர்கள். இப்போது நீங்கள் ஆணவத்தை விட்டுவிட்டு ஓபிசி சமூகத்திடம் உங்கள் கருத்துக்காக மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியதாவது:
அவதூறு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரிய ராகுல் காந்தியின் மனுவை நிராகரித்த சூரத் நீதிமன்றம், பிரதமர் மோடியை தவறாக பேசி இந்தியாவின் ஓபிசி சமூகத்தை அவமதித்தது என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. இந்த விஷயத்தில் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க ராகுல் காந்திக்கு இன்னும் அவகாசம் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

ஜனநாயகத்திற்கு கருப்புநாள்: மெகபூபா
ராகுல் மனு நிராகரிக்கப்பட்டது குறித்து காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி கூறியதாவது: ஜனநாயகத்தின் தாய் என்று பெருமை கொள்ளும் நாட்டின் ஜனநாயக வரலாற்றில் இன்று ஒரு கருப்பு நாள். ராகுல் காந்தி நடத்தப்படும் விதம் பாஜ ஜனநாயகத்தை முடிவுக்குக் கொண்டுவர விரும்புகிறது. அவர்கள் ஒரு கட்சி அமைப்பை நிறுவ விரும்புகிறார்கள். அரசியல் சாசன ஆட்சியை மாற்றிவிட்டு பா.ஜ ராஜ்ஜியத்தை அமைக்க விரும்புகிறார்கள். நீதித்துறைதான் மக்களின் கடைசி நம்பிக்கை. ஆனால் தாமதமாக செயல்படுகிறது.

காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 தொடர்பான மனு விசாரணையின்றி பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன. பில்கிஸ் பானு வழக்கு நிலுவையில் உள்ளது. ஆனால் ராகுல் வழக்கு விரைவுபடுத்தப்பட்டு வருகிறது. இந்திய ஒற்றுமை யாத்திரைக்கு பிறகு ராகுல் புகழ் அதிகரித்ததால் பா.ஜ பயந்து விட்டது. 1947க்கு முன்பு கிழக்கிந்திய நிறுவனத்திற்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்தது போல் மேற்கு இந்திய கம்பெனியின் தவறான ஆட்சிக்கு எதிராக மக்கள் எழுவார்கள் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

You may also like

Leave a Comment

5 + 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi