நாகர்கோவில் : தக்கலை அருகே குளத்தில் இருந்து அனுமதியின்றி மண் எடுப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து பத்மநாபபுரம் சார் ஆட்சியர் ஆய்வின்போது கல்குளம் தாலுகா மருதூர்குறிச்சி கிராமம் பெருங்குளத்திலிருந்து மண் கடத்தப்படுவது தெரியவந்தது. இதனை தொடர்ந்து பத்மனாபபுரம் சார் ஆட்சியர் கவுசிக் ஆய்வு செய்தார். அப்போது குளத்தில் மண் எடுப்பதற்காக 10 டெம்போக்கள் நின்று கொண்டு இருந்தன. அது குறித்து விசாரித்த போது அந்த குளத்தில் இருந்து மண் எடுப்பதற்கு விஜயகுமார் என்பவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும் நடை சீட்டு விவரங்களை பரிசீலனை செய்தபோது அதில் தேதிகள் திருத்தப்பட்டும், மண் இறக்குவதற்கு அனுமதி வழங்கப்படாத இடத்திற்கு மண் கொண்டு செல்வதற்கான பதிவுகளும் கண்டறியப்பட்டன. உடனடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள உதவி புவியியலாளர் வரவழைக்கப்பட்டு விபரங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
அனுமதி ஆணை வழங்கப்பட்டிருந்தாலும் நடை சீட்டுகள் திருத்தப்பட்டிருந்ததாலும் அனுமதிக்கப்படாத இடத்திற்கு மண் கொண்டு செல்வதற்கான பதிவுகள் இருந்ததாலும் குளத்தினை மேலோட்டமாக ஆய்வு செய்து கூடுதலாக வண்டல் மண் எடுத்ததற்கான சாத்திய கூறுகள் தென்பட்டதாலும் மண் எடுப்பதற்காக நின்றிருந்த 10 வாகனங்களும் கல்குளம் தாசில்தார் அடங்கிய குழுவினரால் கைப்பற்றப்பட்டு தக்கலை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.இனிமேலும் இது போல உரிய அனுமதி இல்லாமல் குளங்களில் வண்டல் மண் எடுக்கும் நபர்கள் மீது அதிரடியாக தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என பத்மநாபபுரம் சார் ஆட்சியர் கவுசிக் தெரிவித்துள்ளார்.