புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: தேசிய மருத்துவ ஆணையம் ஆணையிட்டுள்ள செய்திகள் உண்மையாக இருந்தால்: தமிழ்நாட்டில் இனி புதிய மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் இடங்கள் இல்லை. இது மாநில அரசு மற்றும் மாநில சட்டமன்றத்தின் அதிகாரத்தின் மீதான மற்றொரு கடுமையான அத்துமீறலாகும். ஒரு மாநிலம் தனது சொந்த நிதியில் இருந்து, தனது மாணவர்களுக்காக ஏன் புதிய மருத்துவக் கல்லூரியைத் தொடங்கக்கூடாது? ஒன்றிய அரசும் அதன் அமைப்புகளும் கூட்டாட்சி முறையைக் குழிதோண்டிப் புதைத்து வருகின்றன. மோடி அரசின் கீழ் மாநில உரிமைகள் மீதான தாக்குதல் தொடர்கிறது. இவ்வாறுஅவர் கூறி உள்ளார்.