கடலூர்: நெய்வேலி என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளிகளை பணி நிரந்தரம் செய்வது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் 2வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் சுரங்கம் மற்றும் அனல் மின் நிலையங்களில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான ஒப்பந்த தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிறுவனத்தில் பணியாற்றும் ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராடி வரும் நிலையில், இன்றும் 2வது நாளாக சுரங்கம் 2 நுழைவு வாயிலில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தினர் நேற்று மாலை முதல் 6 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ரோஸ்கர் மேளா திட்டத்தின் கீழ் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பணி நிரந்தரம் செய்யும் வரை மாத ஊதியம் 50,000 வழங்குவது என்பதே அவர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.