ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே மாகரல் கிராமத்தில் வயல்வெளிகளில் தாழ்வாக செல்லும் மின்சார கம்பிகளால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. பெரியபாளையம் அருகே மாகரல் கிராமத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு பெருமளவில் விவசாயிகளே உள்ளனர். இந்நிலையில் இந்த கிராமத்திற்கு பாண்டேஸ்வரம் பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் இருந்து மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது.
அவ்வாறு விநியோகிக்கப்படும் மின்சாரம் 40 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட மின்சார கம்பிகளின் மூலம் செல்கிறது. இந்த கம்பிகள் வயல் வெளிகளில் மிகவும் தாழ்வாக செல்கிறது.
இதனால் விவசாயிகள் நாற்று நடவும், ஏர் உழவவும் வயலுக்கு செல்லும்போது எந்த நேரத்தில் மின்கம்பி அறுந்து விழுந்து விடுமோ அச்சத்துடன் தான் வேலை செய்ய செல்கிறார்கள். மின் கம்பிகளை மாற்றாமல் மின்வாரியத்தினர் அலட்சியமாகவே உள்ளனர். எனவே பழைய மின்கம்பிகளை மாற்றி அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.