![](https://www-dinakaran-com.imagibyte.sortdcdn.net/wp-content/uploads/2023/04/38-18.jpg?type=webp&quality=80)
ஊத்துக்கோட்டை:பெரியபாளையம் காவல் நிலையம் முன்பு திமுக பெண் கவுன்சிலர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. பெரியபாளையம் அருகே மெய்யூர் கிராமத்தில் வசித்து வருபவர் தேன்மொழி. இவர் திமுக கவுன்சிலர் ஆவார். இவரது கணவர் ஏழுமலை. இவர்களுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வக்கீல் வேல்முருகன் என்பவருக்கும் கடந்த உள்ளாட்சித் தேர்தலில் இருந்து முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் தகாத வார்த்தைகளால் திட்டி, தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக வக்கீல் வேல்முருகன் மீது கவுன்சிலர் தேன்மொழி பெரியபாளையம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.
ஆனால் போலீசார் இதுவரை எந்த விசாரணையும், நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதை கண்டித்து நேற்று பெரியபாளையம் காவல் நிலையம் முன்பு கவுன்சிலர் தேன்மொழி தலைமையில் அவரது ஆதரவாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையறிந்த ஊத்துக்கோட்டை டிஎஸ்பி கணேஷ்குமார் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உங்கள் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதன்பிறகு அனைவரும் கலைந்து சென்றனர்.