கோலாப்பூர்: மக்களின் பிரச்னைகள் குறித்து பிரதமர் மோடி பேசுவதே இல்லை. அவரது பேச்சில் உண்மை இல்லை என்று சரத்பவார் குற்றம்சாட்டினார். மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரில் தேசியவாத காங்கிரஸ் (சரத்சந்திர பவார்) கட்சி தலைவர் சரத் பவார் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: மக்கள் சந்திக்கும் அடிப்படை பிரச்னைகள் குறித்து பிரதமர் மோடி பேசாமல், அவர்களின் கவனத்தை திசை திருப்புகிறார். உண்மைகள் மற்றும் யதார்த்தத்தின் அடிப்படையில் பேசாத ஒரு பிரதமரை நான் இதற்கு முன்பு பார்த்ததில்லை. என்னையும் உத்தவ் தாக்கரேவையும் குறிவைத்து தாக்கிப்பேசுவதில் அவர் திருப்தி அடைகிறார்.
மகாராஷ்டிராவில் ஏன் ஐந்து கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கிறது என்பது விந்தையாக உள்ளது. மோடி முடிந்தவரை இங்கு பிரசாரம் செய்யலாம் என்பதால்தான் இப்படி ஒரு ஏற்பாடு. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், மத அடிப்படையில் இடஒதுக்கீடு கொண்டு வரப்படும் என்று பிரதமர் மோடி அடிக்கடி கூறி சமூகத்தில் பதற்றத்தை உருவாக்க முயற்சிக்கிறார். மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று இந்தியா கூட்டணி கட்சிகள் எப்போதும் சொன்னதில்லை. இது மோடியின் கற்பனையில் உதித்த யோசனை. சொத்து மறுபங்கீடு மற்றும் வாரிசு வரி குறித்தும் மோடி பேசி வருகிறார், இது காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் எங்குமே இல்லை. இவ்வாறு சரத் பவார் கூறினார்.