சென்னை: தமிழ்நாடு மக்கள் நலனுக்கு எதிராக செயல்படும் எந்த ஒரு கட்சியுடனும் கூட்டணி வைக்க மாட்டோம என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 107வது பிறந்தநாளையொட்டி கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஒவ்வொரு அரசியல் கட்சியும் மற்ற கட்சியுடன் கூட்டணி வைத்து இணைந்து செயல்படுவது தவறு இல்லை. தமிழ்நாடு மக்கள் நலனுக்கு எதிராக செயல்படும் எந்த ஒரு கட்சியுடனும் கூட்டணி வைக்க மாட்டோம் என தெரிவித்திருந்தேன். விவசாயிகளை, தமிழ்நாட்டு மக்களை பாதிக்கும் திட்டங்களையும், ஸ்டெர்லைட், மீத்தேன் ஹைட்ரோ கார்பன் போன்றவற்றையும் தமிழ்நாட்டில் ஒன்றிய அரசு திணிக்கிறது.
தமிழ்நாட்டில் மக்கள் விரும்பாத திட்டங்களை இங்கே திணிப்பதில்லை என நிலைபாட்டை ஒன்றிய அரசு தற்போது எடுத்துள்ளதாக தெரிகிறது. ஓ.பன்னீர்செல்வமும், நானும் வருங்காலத்தில் அரசியலில் இணைந்து செயல்பட வேண்டும் என முடிவை எடுத்துள்ளோம். கூட்டணி பற்றி உரிய நேரத்தில் முடிவை அறிவிப்போம். தமிழ்நாடு அரசு கேட்டுள்ள வெள்ள நிவாரண தொகையை ஒன்றிய அரசு உடனடியாக வழங்க வேண்டும்.
ஆளுநர் ரவியை திரும்ப பெற வேண்டும்: டிடிவி
காவி ஆடை அணிந்த திருவள்ளுவர் படம் வெளியிட்டதை பார்த்தால் ஆளுநர் போல் அவர் செயல்படவில்லை என தெரிகிறது. ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.