சென்னை: மக்களிடம் கனிவாக பழகுங்கள்; அவர்கள்தான் நமது உண்மையான மேல் அதிகாரிகள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் குடிமைப்பணி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்று வருகிறது. அண்ணா மேலாண்மை கல்லூரியில் பயின்று தேர்ச்சி பெற்ற 19 பேர் உட்பட குடிமைப்பணி தேர்வில் தேர்ச்சி பெற்ற 33 பேருக்கு பாராட்டு விழா நடைபெற்று வருகிறது. பாராட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர்,
ஐஏஎஸ், ஐபிஎஸ் என்பது மிகவும் பொறுப்புமிக்க பதவி:
தமிழக அரசு நிறுவனமான அண்ணா நிர்வாக பணியாளர் நிறுவனத்தில் படித்து தேர்ச்சி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள். இந்த இடத்துக்கு உங்களை உயர்த்தியவர்களை வாழ்க்கையில் எந்நாளும் மறக்காதீர்கள். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். என்பது மிகவும் கடமை, பொறுப்புமிக்க பதவிகளாகும். குடிமைப்பணி தேர்வில் வென்றவர்கள் மக்களுக்காக பாடுபட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
அரசின் திட்டத்தால் கிராமமக்கள் வாழ்வு மேம்படுகிறது:
கிராமப்புற மக்களின் வாழ்வானது அரசின் பல்வேறு திட்டங்கள் மூலம்தான் மேம்பட வேண்டும். நாடி வரும் ஏழை, எளிய மக்களின் தேவைகளை நிறைவேற்றும் பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது. அகில இந்திய தேர்வினை சிறப்பாக எதிர்கொண்ட நீங்கள், அடுத்துவரும் பயிற்சியை சிறப்பாக நிறைவுசெய்வீர்கள் என நம்புகிறேன் என்றார்.
மக்கள் உண்மையான மேல் அதிகாரிகள்:
மக்களிடம் கனிவாக பழகுங்கள் அவர்கள்தான் நமது உண்மையான மேல் அதிகாரிகள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மக்களிடம்தான் நாம் நன்மதிப்பை பெற வேண்டும். இத்தோடு போதும் என்று படிப்பை நிறுத்தி விடாதீர்கள்; சமூகத்தை பற்றி நிறைய படிக்க வேண்டும். சட்டத்தின்படியும், மனசாட்சியின்படியும் நீங்கள் செயல்பட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.
ரூ.1000 உரிமைத்தொகை மீதே முழு கவனம்:
மகளிருக்கு ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் மீதே எனது முழு கவனமும் இருக்கிறது. மகளிர் உரிமை தொகை திட்டத்தை செப்.15 முதல் செயல்படுத்த இருக்கிறோம். ரூ.1000 உரிமைத்தொகை யாருக்கெல்லாம் அவசியமோ அவர்களுக்கு அறிவித்துள்ளோம். தமிழ்நாட்டை 5 முறை ஆட்சி செய்த கலைஞரின் பெயர், மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு சூட்டப்பட்டுள்ளது. சொத்தில் பெண்களுக்கு சமஉரிமை என்ற அதிகாரத்தை வழங்கியவர் கலைஞர் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.