சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் ஈரோட்டில் மே 5ம் தேதி, 40வது வணிகர் தினம் வணிகர் உரிமை முழக்க மாநாடு நடக்கிறது. இது சம்பந்தமான தென்சென்னை மேற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் சென்னை அசோக்நகரில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் எம்.ஆர்.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் என்.பி.பாலன், பழையபொருள் சங்கத்தலைவர் இ.எம்.ஜெயக்குமார், மாநிலத்துணைத்தலைவர்கள் வி.ஆனந்தராஜ், சா.அன்பழகன், மாவட்டப் பொருளாளர் ஜெ.வீரபாண்டியன் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா பங்கேற்று மாநாடு சம்பந்தமான விளக்க பேருரையாற்றினார். பொதுச்செயலாளர் வெ.கோவிந்தராஜுலு, பொருளாளர் ஹாஜி ஏ.எம்.சதக்கத்துல்லா, சென்னை மண்டல தலைவர் கே.ஜோதிலிங்கம், கூடுதல் செயலாளர் வி.பி.மணி, செய்தி தொடர்பாளர் பி.பாண்டியராஜன் சிறப்புரையாற்றினர். இதில் சென்னை மண்டலத்திலிருந்து 60 ஆயிரம் வணிகர்கள் மாநாட்டில் பங்கேற்க உள்ளதாக தீர்மானிக்கப்பட்டது.
தொடர்ந்து, ஏ.எம்.விக்கிரமராஜா அளித்த பேட்டி:மாநாட்டு பந்தல் 20 ஏக்கர் பரப்பளவில் மிகப் பிரமாண்டமாக லட்சக்கணக்கான வணிகர்கள் அமரும் வகையில் அமைக்கப்பட உள்ளது. மே 4ம் தேதி செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மாநாட்டு திடலில் ஷாப்பிங் திருவிழாவை திறந்து வைத்து சிற்புரையாற்றுகிறார். 200க்கும் மேற்பட்ட ஷாப்பிங் ஸ்டால்கள் அமைக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.