நெல்லை: தமிழக மக்கள் பாஜகவின் பின்னே வர தொடங்கியுள்ளனர் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நெல்லையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி; ‘திருநெல்வேலி அல்வா’ போன்று மிகவும் இனிமையாகவும், இளகிய மனதோடும் இருப்பவர்கள் நெல்லை மக்கள். தமிழ்நாட்டின் அனைத்து மக்களும் பாஜகவின் பக்கம் நிற்பதை நான் பார்க்கிறன். தமிழக மக்களின் அன்பு எங்களுக்கு உற்சாகத்தை அளிக்கிறது. நாட்டுக்காக உழைக்க நெல்லையப்பர், காந்திமதி அம்மன் நல்லாசி தர வேண்டும். தமிழக மக்கள் பாஜக மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்துள்ளார்கள்.
தமிழ்நாட்டு மக்கள் வருங்காலம், எதிர்காலத்தைப் பற்றி மிகவும் தெளிவாக இருப்பார்கள். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளர்ச்சியில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகித்து வருகிறது. உலகெங்கிலும் வசிக்கும் தமிழ் மக்கள், அவர்களுக்கு கிடைக்கும் மரியாதையை நினைத்து பெருமைப்படுகிறார்கள். நாடு ஒரு புதிய சிந்தனையோடு செயல்பட்டு வருகிறது, இதன் பலன் தமிழகத்திற்கு கிடைக்கும். மாற்று எரிசக்தி துறையில் உலகின் முதன்மையான நாடாக இந்தியா உள்ளது. இது ஒன்றிய அரசின் செயல்பாடுகளால் வருகிறது. பாஜகவின் அணுகுமுறையும் சித்தாந்தமும் தமிழக மக்களின் எண்ணத்தோடு ஒத்துப்போகிறது.
தமிழக மக்கள் பாஜகவின் பின்னே வர தொடங்கியுள்ளனர்; பாஜக ஆட்சியில் தமிழகம் டெல்லிக்கு மிக அருகே வந்திருக்கிறது. இன்று நாடு 100 அடி முன்னேறுகிறது என்றால், தமிழகமும் மிக வேகமாக 100 அடி முன்னேறும், இது மோடியின் உத்தரவாதம். 5 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் 21 லட்சம் வீடுகளில் குழாய் மூலம் குடிநீர் வழங்கப்பட்டது, இன்று 1 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 40 லட்சம் மகளிருக்கு உஜ்வாலா எரிவாயு சிலிண்டர் கிடைக்கிறது. உஜ்வாலா எரிவாயு சிலிண்டர் முலம் தமிழக பெண்களின் வாழ்க்கை எளிதாகி உள்ளது. இதனால் எனக்கு தமிழகத்தில் பெண்களின் ஆதரவு அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் 50 லட்சம் பேர் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் இலவச மருத்துவ உதவி பெறுகிறார்கள். இலங்கை அரசிடமிருந்து ஏராளமான தமிழக மீனவர்களை மீட்டு கொண்டு வந்துள்ளோம். பாகிஸ்தானிடமிருந்து பைலட் அபிநந்தனை பத்திரமாக மீட்டு கொண்டு வந்தது பாஜக அரசு தமிழகத்தை சேர்ந்த பட்டியலினத்தை சேர்ந்தவரை எனது அமைச்சரவையில் வைத்துள்ளேன் இவ்வாறு கூறினார்.