கடலூர்: மாட்டுப் பொங்கலையொட்டி கடலூர் துறைமுகத்தில் மீன்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. மாட்டுப் பொங்கல் அன்று சிலர் தங்கள் முன்னோர்களுக்கு அசைவ உணவை வைத்து படையலிடுவது வழக்கம். இதனால் கடலூரில் இன்று ஆடு, கோழி, மீன் உள்ளிட்ட இறைச்சிகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. இதனால் கடலூர் துறைமுக மீன்பிடி தளத்தில் அதிகாலையிலேயே மீன்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. இதனால் மீன்களின் விலை எதிர்பார்த்ததை விட சற்று உயர்ந்து காணப்பட்டது. வழக்கமாக கிலோ ரூ.500 முதல் ₹.550 வரை விற்பனை செய்யப்படும் வஞ்சிரம் மீன் ரூ750 க்கு விற்பனை செய்யப்பட்டது.
ரூ.200 முதல் ரூ.250 வரை விற்பனை செய்யப்படும் சங்கரா மீன் ரூ. 300க்கு விற்பனை செய்யப்பட்டது. சீலா மீன் ரூ 300க்கும் பன்னி சாத்தான் மீன் ரூ.400க்கும் கொடுவா வகை மீன் ரூ.800க்கும், நண்டு வகைகள் 300 ரூபாய் முதல் 500 ரூபாய் வரையும், காரை மீன் கிலோ 200 ரூபாய்க்கும், கனவா கிலோ 300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல இறைச்சி கடைகளிலும் மக்கள் அதிக அளவில் நின்றதை காண முடிந்தது.