Monday, May 13, 2024
Home » கம்பெனி- கல்லூரி பேருந்துகள் மோதி கொண்டதில் 19 கல்லூரி மாணவர்கள் உட்பட 24 பேர் படுகாயம்: வண்டலூர் அருகே பரபரப்பு

கம்பெனி- கல்லூரி பேருந்துகள் மோதி கொண்டதில் 19 கல்லூரி மாணவர்கள் உட்பட 24 பேர் படுகாயம்: வண்டலூர் அருகே பரபரப்பு

by Ranjith

கூடுவாஞ்சேரி: வண்டலூர் அருகே கம்பெனி பேருந்து, தனியார் கல்லூரி பேருந்து மீது மோதிய விபத்தில் 19 கல்லூரி மாணவ, மாணவிகள், டிரைவர் உட்பட 24 பேர் படுகாயம் அடைந்தனர். சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தொடங்கி பழைய மாமல்லபுரம் சாலையில் இணையும் 18 கிலோ மீட்டர் கொண்ட வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இதில், வண்டலூர் அருகே உள்ள கொளப்பாக்கத்தில் சாலையின் குறுக்கே கடந்த சில மாதங்களாக மந்தகதியில் தரைப்பால பணிகள் நடைபெற்று வருகிறது.

அந்த இடத்தில் ஒருவழி பாதையில் வாகனங்கள் திருப்பி விடப்படுகின்றன. இந்நிலையில், நேற்று காலை கேளம்பாக்கத்தில் இருந்து வண்டலூர் நோக்கி 30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளை ஏற்றுக்கொண்டு தனியார் கல்லூரி பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது, பாலப்பணி நடைபெற்று வரும் இடத்தில் நிலை தடுமாறிய தனியார் கல்லூரி பேருந்து சாலையின் குறுக்கே பாய்ந்தது. அப்போது, வண்டலூரில் இருந்து கேளம்பாக்கம் நோக்கி வந்த தனியார் கம்பெனி பேருந்து, கல்லூரி பேருந்து மீது மோதியது.

இதில், பேருந்தில் இருந்த கல்லூரி மாணவ, மாணவியர் அலறியபடி கூச்சலிட்டனர். இதனை கண்டதும் அப்பகுதி பொதுமக்கள் ஓடி வந்து இடிபாடுகளில் சிக்கிய பேருந்து டிரைவர் மற்றும் மாணவ, மாணவிகளை மீட்டனர். இதில், படுகாயம் அடைந்த 19 கல்லூரி மாணவ, மாணவிகள், பேருந்து டிரைவர் உட்பட 24 பேரை மீட்டு ரத்தினமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் சிக்கிய இரண்டு பேருந்துகளையும் அப்புறப்படுத்தினர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் கல்லூரி பேருந்தும், தனியார் கம்பெனி பேருந்தும் மோதிக்கொண்ட விபத்தில் தனியார் கல்லூரி பேருந்து டிரைவர், 13 மாணவிகள், 6 மாணவர்கள், தனியார் கம்பெனி பேருந்தில் பயணம் செய்த 3 ஆண், ஒரு பெண் உட்பட 24 பேர் படுகாயம் அடைந்தனர்.

அதன் விவரம் பின்வருமாறு, தனியார் கல்லூரி பேருந்து டிரைவர் மாணிக்கம் (36), மாணவிகள் ஜெயசக்தியஸ்ரீ (19), ஜெனீப் (19), ஜனாலியா (18), ஆஷிகா (19), தன்யஸ்ரீ (19), லித்திகாஸ்ரீ (18), பிவின்சனேஜ் (19), மகாலட்சுமி (19), ஆர்த்திகா (19), மகாஸ்ரீ (19), அன்னபூரணி (19), தர்ணிகா (19), கீர்த்தனா (20), மாணவர்கள் கார்த்திக்ஸ்ரீகாந்த் (20), மனோஜ் (19), அருண்ஆண்டனி (19), அஸ்வின் (18), கௌஷிக் (19), மற்றொரு அஸ்வின் (19), தனியார் கம்பெனி ஊழியர்கள் பூர்ணிமா (36), வேல்முருகன் (37), மகேஷ் (24), யுவராஜ் (24) ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். மேலும் இந்த விபத்தால் நேற்று காலை அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசலும், பெரும் பரபரப்பும் ஏற்பட்டது.

You may also like

Leave a Comment

2 × five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi