Wednesday, May 15, 2024
Home » தமிழ்நாட்டில் கடந்த 6 ஆண்டுகளில் வெறிநாய்க்கடியால் 44 லட்சம் பேர் பாதிப்பு: சுகாதாரத்துறை ஆய்வில் தகவல்

தமிழ்நாட்டில் கடந்த 6 ஆண்டுகளில் வெறிநாய்க்கடியால் 44 லட்சம் பேர் பாதிப்பு: சுகாதாரத்துறை ஆய்வில் தகவல்

by Ranjith

சென்னை: ரேபிஸ் நோய் என்பது தடுப்பூசி மூலம் தடுக்கக்கூடிய ஜூனோடிக் வைரஸ் ஆகும். இது மிகவும் ஆபத்தான ஒரு நோய். உலகளவில் ரேபிஸ் நோய் 150 நாடுகளில் பரவி 59,000 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் மூன்றில் ஒரு பங்கு உயிரிழப்புகள் இந்தியாவில் நிகழ்கிறது. நாய்கள் தான் மனித ரேபிஸ் இறப்புக்கான முக்கிய காரணம். இந்த இறப்பு எண்ணிக்கையை குறைக்க இந்திய அரசு 2030க்குள் ‘ரேபிஸ் இறப்பு இல்லாத இந்தியா’ என்ற இலக்கை வைத்துள்ளது. இதற்காக இந்திய அரசு ஒரு அமைப்பை உருவாக்கியது.

இந்த அமைப்பு ரேபிஸ் நோயை தடுக்க செயல்திட்டத்தை உருவாக்க மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியது. இதையடுத்து, தமிழக சுகாதார துறை அதிகாரிகள் ரேபிஸ் நோய் தடுப்பதற்காக பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டனர். அந்த ஆய்வில் ரேபிஸ் நோயை தடுக்கும் வழிமுறைகள், திட்டங்கள் மற்றும் இடர்பாடுகள் குறித்து கண்டறிந்தனர். அதில் நாய்க்கடியை தடுப்பது, வகைப்படுத்துவது, ரேபிஸ் தொற்றை கண்டறிவது மற்றும் ரேபிஸ் தொடர்பான முந்தைய தகவல்கள் இல்லாதது ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் தமிழகத்தில் ரேபிஸ் பூஜ்ஜிய இறப்பு என்ற இலக்கை நெருங்கவில்லை என தெரியவந்துள்ளது.

தமிழ்நாட்டில் 2022 ல் மட்டும் 8.83 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 2018 முதல் 2023 வரை 44 லட்சத்து 10 ஆயிரத்தில் 964 பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதுமட்டுமின்றி 2018 முதல் 2022 வரை ரேபிஸ் நோயால் (வெறிநாய்க்கடி) 121 பேர் இறந்துள்ளனர். சென்னை ஸ்டான்லி மற்றும் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 6,000 பேர் நாய்க்கடிக்கு சிகிச்சை பெற்றுள்ளனர். எனவே ரேபிஸ் நோயை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை, மாநகராட்சிகள் மற்றும் உள்ளாட்சி துறையுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர். 2030க்குள் ரேபிஸ் இறப்பு இல்லாத நிலையை உருவாக்க அனைத்து நடவடிக்கைகளும் தமிழக சுகாதாரத்துறை சார்பில் எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

* நாய் கடித்த பிறகு என்ன செய்ய வேண்டும்…
நாய் கடித்தால், உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். கடிபட்ட காயத்தை 15 நிமிடங்களுக்கு சோப்பை பயன்படுத்தி சுத்தம் செய்யவேண்டும். இப்படி செய்யும் போது காயங்களின் மேற்பரப்பில் இருக்கும் ரேபிஸ் வைரஸ்கள் 80 சதவீதம் அழிந்துவிடும். மருத்துவமனைக்கு சென்று மருத்துவர்கள் ஆலோசனை பெற்று தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். மேலும் அட்டவணையை பின்பற்றி தடுப்பூசியை முறையாக செலுத்திக்கொள்ள வேண்டும். எந்த வகையான மூலிகை மருந்துகளையும் பயன்படுத்தக்கூடாது, சுய மருத்துவம் செய்யக் கூடாது.

You may also like

Leave a Comment

4 + 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi