Sunday, May 5, 2024
Home » பட்டுவாடா பணத்தை அமுக்கி டூர் போன கட்சி பிரமுகர்களால வேட்பாளர்கள் கொந்தளிப்பது பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

பட்டுவாடா பணத்தை அமுக்கி டூர் போன கட்சி பிரமுகர்களால வேட்பாளர்கள் கொந்தளிப்பது பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

by Karthik Yash

‘‘பிரசாரத்தில் சொந்த கட்சியே வேலை பார்க்காததால விரக்தி அடைந்த குக்கர் கட்சி வேட்பாளரே தலைமையிடத்தில் புகார் செய்திருக்கிறாராமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘மலைக்கோட்டை தொகுதியில் தாமரை கட்சி கூட்டணி வேட்பாளராக குக்கர் கட்சியை சேர்ந்த கடைசி பாதியில் முடியக்கூடிய நாதன் என்பவர் போட்டியிட்டார். மலைக்கோட்டை எம்பி தொகுதியில் 2 சட்டமன்ற தொகுதி மன்னர் மாவட்டத்தில் வருகிறது. குக்கர் கட்சி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நாதன், மன்னர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகிகளை நேரில் சந்தித்து தனக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி தேர்தல் பணியாற்ற வேண்டும்னு கேட்டுக்கொண்டாராம். ஆனால் மன்னர் மாவட்டத்தில் உள்ள குக்கர் கட்சி நிர்வாகிகளோ, கூட்டணி கட்சி நிர்வாகிகளோ இறுதிக்கட்ட பிரசார வரையிலும் தேர்தல் பணி செய்ய உடன் வரவில்லையாம்…. இதனால் உச்சக்கட்ட கோபத்தில் இருந்த வேட்பாளர், தேர்தல் முடியும் வரையிலும் அவர்கள் மீது எந்தவித கோபத்தையும் வெளியே காட்டிக்கொள்ளாமல் அமைதியான முறையில் தனது ஆதரவாளர்கள், உறவினர்களை கூட வைத்து பிரசாரம் செய்து முடித்தாராம்… பின்னர் தேர்தல் முடிந்த கையோடு வேட்பாளர் நாதன், குக்கர் தலைமையானவரை நேரில் சந்தித்து பேசியுள்ளார். அப்போது, பிரசாரம் ஆரம்பம் முதல் இறுதிகட்ட பிரசார வரையிலும் மன்னர் மாவட்டத்தில் உள்ள நிர்வாகிகள், மாவட்ட பொறுப்பாளர்கள் யாரும் எனக்கு சப்போர்ட் பண்ண வில்லைன்னு அவர்கள் மீது குற்றம்சாட்டியுள்ளார். இதற்கு தலைமையானவர், தேர்தல் ரிசல்ட்டுக்கு பின்னர் சம்பந்தபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்னு தெரிவித்துள்ளாராம்… இந்த தகவல் தெரிய வந்த மன்னர் மாவட்ட நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் கிலியில் உள்ளார்களாம்.. என்றார் விக்கியானந்தா.
‘‘எலக்‌ஷன் செலவு கணக்கு விவகாரத்துல மலர்க்கட்சி நிர்வாகிங்க பதவிய கூண்டோடு காலி பண்ணிட்டாங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘வெயிலூர் நாடாளும் மன்றத்தோட எலக்‌ஷன் வெயிலைவிட அனல் பறந்துச்சு… வாக்காள பெருமக்களே என்ற வாய்ஸ் முடிஞ்சு, வாக்கு பதிவும் முடிஞ்சது.. இதுல வெயிலூர் தொகுதிக்கு உட்பட்ட பட்டு என்று முடியும் தாலுகாவுல மலர் கட்சிக்கு எலக்‌ஷன் செலவுக்கு கொடுத்ததாக சொல்றாங்க.. ஆனா, கொடுத்ததுக்கு கட்சி தலைமை கணக்கு கேட்டிருக்குறாங்க.. அதுக்கு அந்த ஏரியா நிர்வாகிங்க சரிவர கணக்கு காட்டவே இல்லையாம்.. பதிலும் சரியா வரவில்லையாம்.. இதனால பட்டுன்னு முடியுற ஏரியாவுல மலர் கட்சியின் ஒன்றிய பிரசிடெண்ட், மெம்பர்ஸ் எல்லாரையும் கூண்டோட கலைச்சிட்டாங்களாம்.. இவங்ககிட்ட யாரும் ஏந்த தொடர்பும் வச்சிக்கக்கூடாதுன்னு மற்ற பகுதிகள்ல இருக்குற கட்சிக்காரங்களுக்கும் சொல்லிட்டாங்களாம்.. இதனால, ஒருசில நிர்வாகிங்க நேர்மையாகத்தான் நாங்க இருந்தோம், ஆனா அனைவரையும் சொல்லி எடுத்துட்டாங்களேன்னு புலம்பி வர்றாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘வாக்காளர்களுக்கு கொடுக்காம அமுக்கிய பணத்தில் தேர்தல் முடிந்த மறுநாளே டூர் போன கட்சி பிரமுகர்கள்பற்றி வேட்பாளர்களிடம் புகார் போயிருக்காமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘மழை விட்டும் தூறல் விடாத கதையாய், அல்வா நகர்ல மக்களவை தேர்தல் முடிந்தாலும், அதற்கான சாரல் இன்னமும் ஓய்ந்தபாடில்லை. ஓரிரு கட்சியோட வேட்பாளர்கள் தரப்பில் தேர்தலையொட்டி கொடுக்கப்பட்ட பணத்தை சில பிரமுகர்கள் முழுமையா வாக்காளர்களுக்கு சப்ளை செய்யலையாம்.. தேர்தல் நாளில் கம்முன்னு கிடந்த கட்சி பிரமுகர்கள், மறுநாளே பணத்தோட கோடை வாசஸ்தலங்களுக்கு டூர் போறோம்னு சொல்லிட்டு ஓடி போயிட்டாங்களாம்..
எங்க ஏரியாவுக்கு பணம் வரல, எங்க ஊருக்கு பாதி தொகைதான் வந்துது என சில வாக்காளர்கள், வேட்பாளர்களிடம் சென்று புகார் பட்டியலை வாசிக்க, கொடுத்த ரூபா எங்க போச்சி என வேட்பாளர்கள் தரப்பு கொந்தளிக்குதாம்.. பிள்ளையாருக்கு உடைச்ச தேங்காயை யாரு எடுத்தால்தான் என்னன்னு கட்சிக்காரங்க கைநழுவி ஓடுறாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தூங்கா நகர் மாஜியான தெர்மோகோல், இலைக்கட்சி வேட்பாளரான மருத்துவருடனேயே வலம் வந்து இந்த முறை பிரசாரம் செய்து முடிச்சிருக்காரு.. கடந்த தேர்தலில் தன் மகன் களத்தில் இருந்தபோது, ஆதரவளிக்காமல் உள்ளடி வேலைகளில் தெர்மோகோல் ஈடுபட்டு தோல்வி தந்ததாக செல்லமானவரின் தரப்பினரே அப்போது புலம்பி தள்ளினாங்க.. கட்சிப்பணிகளில் தன்னோடு ஒத்துழைப்பதில்லையென உதயமானவரும் தெர்மோகோல் மீது இப்போதும் கோபத்தில் இருக்கிறாராம்.. இந்நிலையில் இலைக்கட்சி தலைமை எப்படியும் வேட்பாளரான டாக்டரானவரை ஜெயிக்க வைக்க முழு பிரசாரமும் செய்தாக வேண்டும்னு தெர்மோகோலுக்கு உத்தரவு போட்டதாம்.. இதனாலேயே, வேட்பாளருடனேயே சுற்றித்திரிந்து, தன்னை முன்னிறுத்தி தினமொரு பரபரப்பான பேட்டி கொடுத்து தெர்மோகோல் பிரசாரத்தை முடித்திருக்கிறாராம்.. ஆனாலும், ஒவ்வொரு இடத்திலும் வேட்பாளரான மருத்துவரை புகழ்வது போலவே, ‘அமாவாசை சத்யராஜாக ஆயிட மாட்டீங்கள்ல? கடந்த முறை எம்பியா இருந்தவரு இப்படித்தான் ஜெயிச்சதும் அமாவாசை சத்யராஜா மாறிப்போயிட்டாரு’ எனக்கூறியே வேட்பாளரான மருத்துவரை நோகடித்து விட்டாராம்.. தேர்தலுக்கு பிறகு தோல்வியை தொட்டால் மாவட்ட பதவியை இரண்டாக பிரித்து ஒரு பகுதியை வேட்பாளரான மருத்துவருக்கு தந்து விடுவதாக டீலிங்காம்… அதானாலேயே எங்காளு இத்தனை கடும் சொல்லையும் சகிச்சுக்கிட்டு தேர்தல்ல பிரசாரத்தை முடிச்சிருக்காருங்க.. தோத்தாலும் பதவி கிடைக்கலைன்னா விடப்போறதில்லைனு விடாபிடியா இருக்காங்களாம் வேட்பாளரான மருத்துவரின் ஆதரவாளர்கள்..’’ என்றார் விக்கியானந்தா.

You may also like

Leave a Comment

six + fourteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi