விழுப்புரம்: சாதி, மத மோதல்கள் இல்லாத நிலையை தொடர்ந்திட ரோந்து பணிகளை பரலாக்க வேண்டும் என்று போலீசாருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். ‘கள ஆய்வில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ் விழுப்புரம் காவல் சரகத்துக்குட்பட்ட சட்டம்-ஒழுங்கு குறித்து கள ஆய்வு கூட்டம் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்றது. கூட்டத்தில், டிஜிபி சைலேந்திரபாபு, சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி சங்கர், உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், வடக்கு மண்டல ஐஜி கண்ணன், டிஐஜிக்கள் முத்துசாமி, பகலவன், எஸ்பிக்கள் நாதா, மோகன்ராஜ், செந்தில்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: ஒரு மாநிலத்தின் நீண்ட கால வளர்ச்சிக்கு பலகாரணிகள் இருந்தாலும், அங்கு நிலவும் சட்டம் ஒழுங்கு தான் அவற்றில் மிக முக்கியமானதாக அமைகிறது. அமைதியான மாநிலத்தில் சமூக பொருளாதார வளர்ச்சிகள் தொய்வுகளின்றி ஏற்படும். இன்றைய தினம் தமிழ்நாட்டிற்கு பல்வேறு விதமான புதிய தொழில் முதலீடுகள் எல்லாம் வந்து கொண்டிருக்கிறது. இதற்கு நமது மாநிலம் அமைதியாக இருக்கிறது, சட்டம் ஒழுங்கு முறையாக பராமரிக்கப்படுகின்றது என்பது தான் அர்த்தம். அதற்கு நீங்களெல்லாம் அடித்தளமாக இருந்து கொண்டிருக்கிறீர்கள்.
அதே நேரத்தில் சில சமயங்களில் சிறுபிரச்னைகள் கூட ஆரம்ப கட்டத்தில் சரியான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், அதுவே பின்னர் பெரிய பிரச்னையாக போய்விடுகிறது. அந்தப் பிரச்சனைகள் குறித்த செய்திகள் மிக வேகமாக பரவி விடுகிறது. எனவே, சிறுசம்பவம் கூட கவனமாக கண்காணிக்கப்பட வேண்டும் என்பதில் தான் நீங்களெல்லாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அடுத்தப்படியாக, காவல் துறையினராகிய நீங்களும், மாவட்ட ஆட்சியர்களும், சமூக ஊடகங்களின் வீச்சினையும், அவை ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தினையும் உணர்ந்து செயல்பட வேண்டும். குற்ற நிகழ்வுகளை பொறுத்தவரை, மாவட்ட காவல்துறைக்கு கியூ பிரிவு, உளவுத்துறை, சமூக ஊடகங்கள் மற்றும் மாவட்ட நிருவாகம் ஆகியவற்றின் மூலம் பெறப்படும் தகவல்களை சேர்த்து கூர்மையாக ஆய்வு செய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், சாதி, மத மோதல்கள், கூட்டு வன்முறைகள், திட்டமிட்ட கலவரங்கள் ஆகியவை சமீபகாலங்களில் நிகழவில்லை.
இந்த நிலை தொடரும் வகையில் நீங்கள் ரோந்துப் பணிகளை பரவலாக்க வேண்டும். இளைஞர்கள் போதைப்பொருட்களுக்கு அடிமையாகாமல் தடுக்க வேண்டியது காவல்துறையின் கடமை. இதில், மாவட்ட ஆட்சியர்களின் பங்கும் முக்கியமானது. போதைப்பொருட்களை பொறுத்தவரை, மிகமிகக் கடுமையான நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்பட வேண்டும். இது தமிழ்நாட்டின் எதிர்காலம் சம்மந்தப்பட்டது என்பதை நீங்கள் உணர வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு மிகமிக முக்கியமானதாகும். . இவர்கள் மீதான குற்றங்களில் காலதாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.காவல் துறை உங்களின் நண்பன் என்ற வாசகத்தை நாம் சொல்லாமல், காவல்துறை எங்கள் நண்பன் என்று பொதுமக்கள் சொல்லும் அளவிற்கு நாம் நடந்து கொள்ள வேண்டும், நடந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் விடைபெறுகிறேன் . இவ்வாறு அவர் பேசினார்.
* விழுப்புரத்தில் ஐ.டி பார்க் அமைக்க வலியுறுத்தல்
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு சங்கங்களின் பிரதிநிதிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கலந்துரையாடி, அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்தார். அப்போது, விழுப்புரம் மாவட்ட குறு மற்றும் சிறு தொழில் சங்க நிர்வாகிகள் இந்தியாவிலேயே தமிழ்நாட்டை தொழில் துறையில் முன்னணி மாநிலமாக விளங்கிட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதற்காகவும், வெளிநாட்டு தொழில் நிறுவனங்களை தமிழ்நாட்டில் தொழில் தொடங்க நடவடிக்கை எடுப்பதுடன் அதற்கான கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்தி வருவதற்காகவும் முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர். 3 மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் விழுப்புரம் நகரத்தில் ஐடி பார்க் அமைக்க வேண்டும். தொழில் முனைவோர்களுக்கு கருத்தரங்கு மற்றும் பயிற்சிகள் அளித்திட வேண்டும். உற்பத்தி செய்த பொருட்களை காட்சிப்படுத்தவும் வணிக வளாகம் கட்டித்தர வேண்டும். பொற்கொல்லர்களுக்கு பாதுகாப்பான தொழில் பூங்கா அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.