Wednesday, May 8, 2024
Home » காட்பாடியில் அகற்றிய சில மாதங்களில் நெடுஞ்சாலையோரங்களில் மீண்டும் முளைத்த ஆக்கிரமிப்பு கடைகள்

காட்பாடியில் அகற்றிய சில மாதங்களில் நெடுஞ்சாலையோரங்களில் மீண்டும் முளைத்த ஆக்கிரமிப்பு கடைகள்

by Lakshmipathi
Published: Last Updated on

*கடும் போக்குவரத்துபாதிப்பு

வேலூர் : காட்பாடியில் ஆக்கிரமிப்புகள் அகற்றிய சில மாதங்களில், நெடுஞ்சாலையோரங்களில் மீண்டும் ஆக்கிரமிப்பு கடைகள் முளைத்துள்ளது. இதனால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்க நிரந்தர நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.காட்பாடியில் குடியாத்தம் சாலை சந்திப்பு தொடங்கி சித்தூர் நோக்கி செல்லும் சாலையில் காட்பாடி தொடங்கி மெட்டுக்குளம் வரையில் சாலையின் இருபுறங்களிலும் அதிகளவில் ஆக்கிரமிப்புகள் செய்து கடைகள் வைக்கப்பட்டிருந்தது. இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது என்று புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.

இதையடுத்து, நெடுஞ்சாலைத்துறையினர், காவல்துறையினர், மாநகராட்சி அதிகாரிகள் அனைவரும் இணைந்து காட்பாடி பெண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே, அருகே, உழவர் சந்தை செல்லும் பாதை, காட்பாடி, செங்குட்டை, கல்புதூர், மெட்டுக்குளம் என்று அதிரடியாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. அப்போதே, சில இடங்களில் அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் பாரபட்சத்துடன் கடந்து சென்றனர். இருப்பினும் ஓரளவிற்கு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

இந்நிலையில், ஆக்கிரமிப்புகள் அகற்றிய சில மாதங்களில் அகற்றப்பட்ட இடங்களில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் முளைத்துவிட்டது. கடைகளுக்கு முன்பு இரும்பு ஷீட்டுகள் அமைத்தும், சிமென்ட் கான்கிரீட் போட்டும் வேலைகள் தொடங்கியுள்ளது. வழக்கம் போல் ஆக்கிரமிப்புகள் முளைத்துவிட்டது. இதனால் மீண்டும் காட்பாடி பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட தொடங்கியுள்ளது.

பள்ளிகள் தற்போது விடுமுறை உள்ள நிலையில் போக்குவரத்து நெரிசல் என்றால், பள்ளி தொடங்கினால் மேலும் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கக்கூடும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றி நிரந்தர தீர்வு காண வேண்டும். பாரபட்சம் காட்டிய இடங்களிலும் ஆக்கிரமிப்புகளை அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

You may also like

Leave a Comment

twelve + fourteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi