Saturday, July 27, 2024
Home » பரோட்டாவின் வரலாறு தெரியுமா..?

பரோட்டாவின் வரலாறு தெரியுமா..?

by Lavanya

இந்தியா மட்டுமல்ல பல உலக நாடுகளில் விலை மலிவாகவும் அதே சமயத்தில் எல்லாத் தரப்பு மக்களும் விரும்பும் உணவாகவும் இருப்பது பரோட்டாதான். சைவம் மற்றும் அசைவ விரும்பிகள் அனைவராலும் விரும்பப்படும் உணவும் கூட. இந்தியாவில் மூன்று வேளையுமே பரோட்டாவை உணவாக சாப்பிடக்கூடிய மக்கள் இருக்கிறார்கள். இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ், மலேசியா, சிங்கப்பூர், மொரீஷியஸ், மாலத்தீவுகள், நேபாளம், இந்தோனேசியா என பலநாட்டு மக்களையும் வசீகரித்து நாடுகளை கடந்து மொழிகளை கடந்து இன்றளவும் உணவுப் பிரியர்களின் லிஸ்ட்டில் பிரியாணிக்கு அடுத்த இடத்தில் இருப்பது பரோட்டா. இவ்வளவு சிறப்பு வாய்ந்த பரோட்டா எப்படி உருவானது என அது பிறந்த கதையை தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா? அப்படியென்றால் இந்த பக்கத்தை தொடர்ந்து வாசியுங்கள்.என்ன…. பரோட்டாவுக்கு வரலாறா.? என்று
பலரும் நினைக்கலாம். ஆனால், எந்த ஒரு உணவுமே ஏதோ ஒரு தருணத்தில் தானே பிறந்திருக்கும்.

அப்படித்தான் பரோட்டாவும். ஊருக்கு ஊர் உருமாறி, பெயர் மாறி விதவிதமான சுவையில் உருவாகும் பரோட்டாவுக்கு வித்தியாசமான சுவாரஸ்யமான வரலாறு உண்டு.தற்போது, ஆலு பரோட்டா, கொத்துப் பரோட்டா, வீச்சுப் பரோட்டா, பொரித்த பரோட்டா, மலபார் பரோட்டா, சிலோன் பரோட்டா, சில்லி பரோட்டா, முட்டைப் பரோட்டா, செட் பரோட்டா, காயின் பரோட்டா, மதுரை பன் பரோட்டா, கிழி பரோட்டா என்று புதுசு புதுசாய் பல விதமான பெயர்களில் பல்வேறு சுவைகளில் உருவாகும் புரோட்டாவின் தாயகம் இந்தியத் துணைக்கண்டத்தில் இருந்த இப்போதைய பெஷாவர் தான் என்று பல வரலாற்று ஆசிரியர்கள் சொல்கிறார்கள்.மற்றொருபுறம், பரோட்டாவின் பிறப்பிடம் கேரளா என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் பரோட்டா பிறந்தது வட இலங்கையில் என்று சொல்லப்படுகிறது. ஆங்கிலேயர் காலத்தில், இலங்கையிலிருந்து தமிழ் நாட்டில் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வேலைக்காக பலர் வந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது சீக்கிரம் கெட்டுப் போகாத உணவாகவும், பசியை தாங்கக்கூடிய வகையில் கம்மியான செலவில் செய்து சாப்பிடவும்தான் ஆரம்பத்தில் பரோட்டா தயார்படுத்தப்பட்டது. வட இலங்கையில் தமிழர்கள் உருவாக்கிய உணவான பரோட்டா, தூத்துக்குடி வழியாகதான் இந்தியாவுக்கு வந்தது. அதேசமயம், அந்தக்காலத்தில் பணிநிமித்தமாக பர்மா, மலேசியாவிற்கு போன தமிழர்கள் வாயிலாகவும் பரோட்டா தமிழகம் வந்ததாகவும் சொல்லப்படுகிறது. ஆக, பரோட்டாவின் பிறப்பிடம் எது என்று அறிய நிச்சயமான சான்றுகள் ஏதும் இல்லை. ஆரம்பத்தில் கோதுமை மாவில் நிறைய நெய் விட்டு செய்யப்பட்ட புரோட்டா இரண்டாவது உலகப்போரின்போது கோதுமைக்கு தட்டுப்பாடு ஏற்பட, மரவள்ளிக்கிழங்கிலிருந்து தயாரிக்கப்பட்ட மைதாவுக்கு மாறி உள்ளது. அதோடு நெய்யையும் விட்டுவிட்டு எண்ணெய் ஊற்றி தயாரிக்க ஆரம்பித்துள்ளனர்.

எளிய மக்களின் உணவாகக் கருதப்படும் பரோட்டா ஜீரணமாக வெகுநேரம் பிடிப்பதால் உழைக்கும் வர்க்கத்தினர் நீண்ட நேரப் பசியைப் போக்கிக் கொள்ளவே பரோட்டாவை விரும்பி உண்டனர். 1970, 80களில் கேரளாவில் ஆரம்பிக்கப்பட்ட சில கடைகள் வாயிலாக பரோட்டா மலையாள தேசத்தில் விருப்பமான உணவாகவும், தவிர்க்க முடியாத உணவாகவும் மாறிப்போனது. தமிழ் நாட்டில் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு வகையான பரோட்டாக்கள் உண்டு. அதன் சுவையும் வகை வகையாய் இருப்பதுண்டு. தென் பகுதியில் ப்ரோட்டா (brotta) என்றும் சொல்லப்படுவதுண்டு. சில இடங்களில் பரோட்டா (parotta) என்றும், பரோட்டா (barotta) என்றும் சொல்வார்கள். சில பரோட்டாக்களில் உள்ளே stuff (முட்டை /சிக்கன்/மட்டன்) வைத்தும் செய்யப்படுகிறது.

சிலது கைக்கு அடக்கமாக சிறியதாக இருக்கும்; சில பரோட்டாக்கள் பெரிதாக இருக்கும். இன்று தமிழகத்தில் மதுரையிலும், திருநெல்வேலியிலும் தான் பரோட்டா தரமானதாக இருக்கும் என்ற நம்பிக்கை பரவலாக உண்டு. அதுபோன்று, கடையில் முதல் நாள் மீந்த பரோட்டாவை மறுநாள் பிய்த்துப் போட்டு வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளி என அயிட்டங்களை சேர்த்து கொத்து பரோட்டாவாக புதிய ஐட்டத்தை கண்டுபிடித்த பெருமை மதுரையையே சாரும். வடநாட்டில் பராத்தா (Paratha) என்ற உணவு பிரசித்தம். சிலர் பராத்தாவும், பரோட்டாவும் ஒன்று என்று நினைத்திருக்கிறார்கள். ஆனால், பராத்தா கோதுமை மாவில் செய்யப்படுவது. பெரும்பாலும் அப்படியே சுட்டு, வட்ட மண் குடுவையில் சுட்டு வைத்து சாப்பிடும் ஒரு உணவு பதார்த்தம். இதிலும் உருளை, பனீர், கோபி, நான்-வெஜ் என stuff செய்து தரப்படுகிறது. இந்த பராத்தாக்கள் அரபு தேசத்திலிருந்தும், முகலாய படையெடுப்பின் போதும் நம் நாட்டிற்குள் வந்திருக்கலாம் என சொல்கிறார்கள். வடநாட்டு பராத்தாவும், நம்ம ஊர் பரோட்டாவும் ஒன்றல்ல. பராத்தா சாப்பிட நன்றாகவே இருந்தாலும், நம்ம பரோட்டாவின் சுவையே வேறு ரகம்.

ஸ்ரீ தேவி

You may also like

Leave a Comment

4 × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi