தமிழகத்தில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரை, திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த தொகுதிகளில் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து முடிவு எடுக்க அந்த கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. அதில், மாநில செயற்குழு உறுப்பினர் நூர்முகமது, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் சம்பத், வாசுகி, சண்முகம் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் தங்கள் கட்சி சார்பாக மதுரையில் சு.வெங்கடேசன், திண்டுக்கலில் சச்சிதானந்தன் ஆகியோரை வேட்பாளராக களம் இறக்க முடிவு எடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அக்கட்சியின் 2 வேட்பாளர்களின் பெயரை மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தார். மதுரை மக்களவைத் தொகுதியில் களம் இறக்கப்பட்டுள்ள சு. வெங்கடேசன் மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு உறுப்பினராகவும், தற்போதைய மதுரை தொகுதி எம்பியாகவும் உள்ளார். சாகித்ய அகாதெமி விருது பெற்ற அவர் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார். திண்டுக்கல் மக்களவைத் தொகுதி சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் அந்த கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராகவும் திண்டுக்கல் மாவட்ட செயலாளருமாக உள்ளார்.
* திமுக மிகப்பெரிய வெற்றியை பெறும்: அமைச்சர் மெய்யநாதன் ஆரூடம்
புதுக்கோட்டை நகராட்சிக்கு சொந்தமான புதுகுளத்தை புனரமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,‘வரலாற்று சிறப்பு வாய்ந்த 112 ஆண்டுகள் கண்ட புதுக்கோட்டை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்திய தமிழ்நாடு முதலமைச்சருக்கு புதுக்கோட்டை மாவட்ட மக்களின் சார்பாக நன்றி. தமிழ்நாடு முதலமைச்சர், 33 மாத கால ஆட்சியில் தந்துள்ள எல்லாருக்கும் எல்லாம் என்ற திராவிட மாடல் ஆட்சியின் வெற்றி 40க்கு 40 என்ற மிகப்பெரிய வெற்றியை பெறுவோம். மரங்களை நடவு செய்வதுதான் வெப்பத்தை தணிப்பதற்கான முக்கியமான நடவடிக்கை,’என்றார்.