Wednesday, May 1, 2024
Home » நாடாளுமன்ற தேர்தலில் ஜனநாயகத்தை காக்க உறுதி எடுப்போம்: மமக தலைவர் ஜவாஹிருல்லா வேண்டுகோள்

நாடாளுமன்ற தேர்தலில் ஜனநாயகத்தை காக்க உறுதி எடுப்போம்: மமக தலைவர் ஜவாஹிருல்லா வேண்டுகோள்

by Mahaprabhu

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் ஜனநாயகத்தை காக்க உறுதி எடுப்போம் என்று மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ வேண்டுகோள் விடுத்துள்ளர். மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ இன்று வெளியிட்ட அறிக்கை: ஏப்ரல் 19(நாளை) நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல் ஜனநாயகத்திற்கும் பாசிசத்திற்கு இடையில் நடைபெறும் அறப்போராகும். பன்முக சமூகத்தில், வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்திய திருநாட்டின் அமைதியை கடந்த பத்து ஆண்டுகள் சீர்குலைத்து, பாசிச பாஜக ஆட்சி செய்தது என்றால் அது மிகையாகாது. நம் முன்னோர் வழங்கிய சுதந்திர இந்தியாவின் பன்முக மதசார்பற்ற கொள்கையை அரசியல் சட்ட சாசன முகவுரையில், இந்திய திருநாட்டில் நிலைத்து நிற்க வேண்டுமாயின், ஜனநாயகம் காக்கப்பட வேண்டும். வயது தளர்ந்த முதியவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த ரயில் பயண கட்டண சலுகையை பறித்த ஆட்சி மோடி ஆட்சி. வரலாற்றில் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரிக்க காரணமான ஆட்சி பாஜக ஆட்சி.

பெட்ரோல் டீசல் விலையை விண்ணுக்கு முட்டவைத்து, மக்களின் துயரை வேடிக்கை பார்த்த ஆட்சி மோடி ஆட்சி. அக்னிபாத் என்னும் தற்காலிக ராணுவ வீர்களை பணி அமர்த்துவோம் என்று கோடிக் கணக்கான இளைஞர்களின் மத்தியில் அச்சத்தையும் எதிர்ப்பையும் ஏற்படுத்திய ஆட்சி இந்த பாஜக ஆட்சி. வங்கியில் கணக்கு இல்லாத அனைவரும் பிரதமரின் ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ், வங்கி கணக்கு துவங்க வேண்டும் என கூறி, பாமர மக்களின் வங்கி கணக்குகளில் குறைந்த பட்சம் வைப்புத் தொகை இல்லை எனக்கூறி, கிட்ட தட்ட 21 ஆயிரம் கோடி ரூபாயை கொள்ளை அடித்து வரும் ஆட்சி பாஜக ஆட்சி. இரு பிரிவினருக்கு இடையே மோதலை உருவாக்கி, வடகிழக்கு இந்தியாவை பற்றி எரிய வைத்து, அங்குள்ள பெண்களை பாலியல் துன்புறுத்தல்களுக்கு இலக்காகிய போதும், அந்த துயரில் குளிர் காய்ந்த ஆட்சி, இந்த பாஜக ஆட்சி. குறைந்த பட்ச ஆதார விலையை சட்டபூர்வமாக மாற்ற கோரி்ய விவசாயிகளை, டெல்லியின் வீதிகளில் போராட வைத்து, அவர்கள் மீது காவல்துறை தாக்குதல்களை நடத்திய ஆட்சி, இந்த பாஜக ஆட்சி.

அமலாக்கத்துறை, வருமான்வரித்துறை, சிபிஐ் உள்ளிட்ட அரசின் துறைகளை தனக்கு சாதகமாக பயன்படுத்தி, நவீன முறையில், சட்டப்பூர்வ ஊழாலன ”தேர்தல் பத்திரங்களை” வைத்து, கொள்ளை அடித்த ஆட்சி பாஜக ஆட்சி. குதிரை பேரத்தில் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை களைப்பதும், மாநில முதல்வர்களை கைது செய்து சிறையில் அடைப்பதும், ஜனநாயகத்தின் வழியே சர்வாதிகார போக்கை கையாண்டு வந்த ஜனநாயக விரோத ஆட்சி, மோடியின் பாஜக ஆட்சி. மதத்தின் அடிப்படையில் குடியுரிமையை வழங்கும், குடியுரிமை சட்டம் எனப்படும் பாரபட்சமான அரசியல் சாசனத்திற்கு விரோதமான சட்டத்தை இயற்றி, முஸ்லிம் மற்றும் இலங்கை வாழ் தமிழ் மக்களை வஞ்சித்த அரசு, இந்த பாஜக ஆட்சி.

இத்தனையும் நடைபெறும் போது, வாய் மூடி மௌனமாக, அவர்களின் மக்கள் விரோத ஆட்சியை ஆதரித்து, கூட்டணியில் இணைந்து இளைப்பாறிய கட்சி தான் ”அதிமுக”. இன்று கூட்டணி முறிவு என்ற தேர்தல் நாடகத்தை, அச்சு பிழறாமல் நடத்தி வரும் அதிமுக, மேலே குறிப்பிட்ட எந்த ஒரு மத்திய அரசின் மக்கள் விரோத செயல்களையும், அதற்கு காரணமான மோடி எங்கள் பிரதமர் வேட்பாளர் இல்லை என, எடப்பாடி பழனிச்சாமி பேசவோ, பரப்பவோ இல்லை என்பது, பாஜக- அதிமுக வின் கள்ள கூட்டணி உறவை அம்பலப்படுத்தி உள்ளது. எனவே, இத்தகைய போலி ஜனநாயக நாடக நடிகர்களை நம்பி, உங்கள் அர்த்தமுள்ள வாக்கை வீணாக்கி விடாமல், இந்தியாவை நியாயத்தின் பக்கம் அழைத்து செல்லும், ”இந்தியா கூட்டணியை” வெற்றி பெற செய்வது தான், தேசத்தை காக்க ஒவ்வொரு குடிமகனும் செய்யவேண்டிய கடமையாக இருக்க முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

2 × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi