Tuesday, May 14, 2024
Home » கனமழை எச்சரிக்கையை திரும்ப பெறும் வரை பொதுமக்களின் பாதுகாப்பு கருதி 525 பூங்காக்களை மூட உத்தரவு: மாநகராட்சி அதிகாரிகள் தகவல்

கனமழை எச்சரிக்கையை திரும்ப பெறும் வரை பொதுமக்களின் பாதுகாப்பு கருதி 525 பூங்காக்களை மூட உத்தரவு: மாநகராட்சி அதிகாரிகள் தகவல்

by Ranjith

சென்னை: கனமழை எச்சரிக்கையை திரும்ப பெறும் வரை, பொதுமக்களின் பாதுகாப்பு கருதி சென்னையில் உள்ள 525 பூங்காக்களை இன்று முதல் மூட மாநகராட்சி உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாகவும், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும் தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக மழை வெளுத்து வாங்கியது. நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு தொடங்கிய கனமழை 3 மணி நேரத்திற்கு மேல் நீடித்தது.

மீனம்பாக்கத்தில் அதிகபட்சமாக 26 செ.மீ மழை பதிவாகியுள்ளது. சென்னை, கொளத்தூர், திரு.வி.க நகர் பகுதிகளில் 15 செ.மீ. மழையும், அம்பத்தூரில் 14 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. மேலும் தியாகராய நகர், அசோக் நகர், தேனாம்பேட்டை, அயனாவரம் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. கே.கே. நகர் பர்னபி சாலை, அயனாவரம், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்ததால், மக்கள் அவதிக்கு உள்ளாகினர். இன்னும் இரண்டு நாட்களுக்கு கனமழை தொடரும் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதையடுத்து சென்னையில் நேற்று மாலை முதல் பெய்து வரும் மழையால் பல்வேறு சாலைகளில் மழைநீர் குளம் போல் தேங்கி உள்ளன.

இதனால் பொதுமக்கள் பலரும் கடும் அவதி அடைந்துள்ளனர். பல்வேறு இடங்களில் சாலைகளில் இருக்கும் பள்ளங்கள் மற்றும் குழிகள் எங்கே இருக்கிறது என தெரியாமல் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகிவருகின்றனர். மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இரண்டு நாட்கள் கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்த நிலையில் கனமழை எச்சரிக்கை திரும்ப பெறும் வரை சென்னை மாநகராட்சியில் உள்ள 525 பூங்காக்கள் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி இன்று முதல் அனைத்து பூங்காக்களையும் மூட சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

You may also like

Leave a Comment

2 + one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi