சென்னை: பரந்தூர் புதிய விமான நிலையத்துக்கு நில எடுப்புக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள 20 கிராமங்களை உள்ளடக்கி சுமார் 5,746 ஏக்கர் பரப்பளவில் பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அங்கு விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 595 நாட்களாக அப்பகுதி மக்கள் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே முதற்கட்டமாக பொடாவூர் கிராமத்தில் விமான நிலையத்துக்கான நிலங்களை கையகப்படுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்நிலையில் காஞ்சிபுரம் வட்டத்தில் உள்ள சிறுவள்ளூர் கிராமத்தில் 1,75,412 ச.மீ., நிலத்தை எடுப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிலம் குறித்து பாத்தியதை உள்ளவர்கள் தங்களின் கோரிக்கை மற்றும் ஆட்சேபனைகளை 30 நாளுக்குள் தெரிவிக்கலாம். விமான நிலைய திட்ட வருவாய் அலுவலருக்கு ஆட்சேபனையை எழுத்து மூலமாக தெரிவிக்கலாம். ஆட்சேபனைகள் மீது ஏப்ரல் 30ம் தேதியன்று விசாரணை மேற்கொள்ளப்படும். ஏற்கனவே, காஞ்சிபுரம் வட்டத்தில் உள்ள பொடவூர் கிராமத்தில் நிலத்தை எடுப்பதற்கான அறிவிப்பும் வெளியானது குறிப்பிடத்தக்கது.