Sunday, June 16, 2024
Home » பேப்பர் கேர்ள்!

பேப்பர் கேர்ள்!

by Nithya

நன்றி குங்குமம் தோழி

ஒருவருக்கு ஒரு கனவும், அதை அடைய வேண்டும் என்ற ஆர்வமும் இருந்தால், அதை அடைவதை யாராலும் தடுக்க முடியாது என்று சொல்கிறார் டெல்லியை சேர்ந்த ஆர்த்தி ராவத். சமூக வலைத்தளங்களில் ‘பேப்பர் கேர்ள்’ என்று வர்ணிக்கும் அளவிற்கு காகிதங்களில் பல கலைப் படைப்புகளை உருவாக்கி வருகிறார். ‘ராவ் அண்ட் கிராப்ட்’ என்ற பெயரில் காகிதங்களில் பலவிதமான பொருட்களை செய்து விற்பனை செய்து வருவதோடு மட்டுமில்லாமல் பல பெண்களுக்கு இந்தக் கலையை சொல்லிக் கொடுத்தும் வருகிறார் ஆர்த்தி ராவத்.

‘‘நான் தில்லியில் வசிக்கிறேன். என்னோட சின்ன வயசுல நான் பேப்பர்ல நிறைய பொருட்களை செய்வேன். எல்லோரும் முதல்ல பேப்பர்ல கப்பல் செஞ்சுதான் பழகுவாங்க. அதே மாதிரிதான் நானும் காகிதத்தில் கப்பல் செய்ய தொடங்கி அதனைத் தொடர்ந்து பல பொருட்களை செய்ய ஆரம்பித்தேன். சின்ன வயசுல எனக்கு அதுதான் பொழுதுபோக்கா இருந்தது. காலப்போக்கில் இதை எல்லாம் அப்படியே விட்டுவிட்டு படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். பி.காம் படிச்சி முடிச்சிட்டு தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேர்ந்தேன்.

கொஞ்ச காலம் போனதும் எனக்கு ஒரே இடத்துல உட்கார்ந்து வேலை செய்ய பிடிக்கல. என்னோட கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ந்துட்டு நம்மோட பெயர் சொல்ற மாதிரி ஏதாவது செய்யணும்னு தோணுச்சு. அதோட விளைவு நான் வேலையை விட்டுட்டு யு.பி.எஸ்.சி தேர்வுகளுக்கு படிக்க தொடங்கினேன். இந்த மாதிரியான மனநிலை எப்படி வந்துச்சின்னு எனக்கு இன்னமும் தெரியல. ஆனாலும் ஒரு வித நம்பிக்கையில போட்டி தேர்வுகளுக்கு படிக்க தொடங்கினேன்.

கல்யாணத்திற்கு பிறகும் படிச்சிட்டுதான் இருந்தேன். போட்டி தேர்வில் இறுதி வரை போய் வேலை கிடைக்காம போயிருக்கு. தளராம நான் படிச்சிட்டு இருந்தாலும் எனக்கான செலவுகளை பார்த்துக் கொள்வதற்காகவாவது, ஏதாவது ஒரு தொழில் செய்ய வேண்டும் என்ற சூழல் ஏற்பட்டது. என்ன பண்ணலாம்னு யோசிக்கும் போது கொரோனா பாதிப்பால், எங்கேயும் போக முடியல. வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அந்த சமயத்துலதான் நான் பொழுதுபோக்கிற்காக பேப்பரில் பொருட்கள் செய்ய தொடங்கினேன்’’ என்றவர் எப்படி இந்த வேலையில் சாதனை படைத்தார் என்பதை சொல்லத் தொடங்கினார்.

‘‘ஆரம்பத்தில் நான் கலை சார்ந்த வேலைகள் செய்கிறேன் என்றதும் என்னுடைய வீட்டில் எப்படி செய்யப் போறே, அதுல என்ன வருமானம் கிடைக்கும் என்றெல்லாம் கேட்டார்கள். ஆனால் எனக்கு நான் செய்யும் பொருட்களின் மீது ஆர்வம் இருந்தது. அதனாலேயே துணிந்து இறங்கினேன். நான் செய்யும் வேலைகள் குயிலிங் என்று சொல்வார்கள். குயிலிங் ஆர்ட் என்பது ஒரு கடல் போன்றது. அதில் நிறைய பொருட்களை செய்யலாம். அதில் நான் தேர்ந்தெடுத்தது சுவரில் மாட்டுவது போன்ற பேப்பர் ஆர்ட் வேலைப்பாடுகள். குயிலிங் பேப்பர்களை உருட்டி நாம் விரும்பும் வடிவத்திற்கு ஏற்ப மாற்றிக்கொள்ளலாம். பல வடிவங்களை செய்து ஒன்றாக பார்க்கும் போது மிக அழகாக தெரியும். 1970 மற்றும் 80களில் ஐரோப்பாவில் குயிலிங் ஆர்ட் மிகவும் பிரபலமாக இருந்தது. இடையில் படிப்படியாக செல்வாக்கு குறைந்து தற்போது மீண்டும் இந்த கலை மக்களிடையே பிரபலமாகி வருகிறது.

அதிலும் குறிப்பாக பெண்கள் வீட்டிலிருந்தபடியே இந்த குயிலிங் ஆர்ட்களை செய்கின்றனர். நானும் படிக்கும் போது சமூக வலைத்தளங்களில் இந்த குயிலிங் ஆர்ட்டை பார்த்து எனக்கு ஆர்வம் ஏற்பட்டு செய்து பார்த்தேன். நான் செய்தவற்றையெல்லாம் என்னுடைய சமூக வலைத்தளங்களில் பதிவிட்டேன். பலர் என்னுடைய வேலைகளை பாராட்டினர். அதில் சிலர் நான் செய்த குயிலிங் ஆர்ட்களை வாங்கவும் தொடங்கினர். எனக்கு ஓரளவுக்கு வருமானம் வந்தது. அதோடு நிறைய ஆர்டர்களும் வந்தது.

அதனாலேயே முழு நேர வேலையாக இந்த தொழிலை செய்யத் தொடங்கினேன். பிறந்தநாள் விழாக்களுக்காக ஒருவருக்கு கொடுக்கும் வாழ்த்து அட்டையில் இருந்து, சுவற்றில் மாட்டப்படும் பெரிய படங்கள் வரை நான் செய்து வருகிறேன். நான் செய்த பொருட்களை பார்த்தவர்கள் என்னை ‘பேப்பர் கேர்ள்’ என்று பெயர் வைத்து அழைக்க ஆரம்பித்தனர். நான் பொருட்கள் செய்ததோடு மட்டுமில்லாமல் இதை பல பெண்களுக்கு ஆன்லைன் மற்றும் நேரடி பயிற்சிகளும் அளிக்கிறேன்.

கலைப்படைப்புகள் எல்லாமே நம்முடைய கைகளால் செய்தால்தான் அழகாக இருக்கும். மக்களும் கைகளால் செய்யும் கலைப் பொருட்களையே அதிகம் விரும்புகிறார்கள். கையால் செய்யப்பட்ட குயிலிங் ஆர்ட்களை செய்யும் போது அதிக நேரமாகும் என்றாலும், பார்ப்பதற்கு அழகாக இருக்கும். நான் தொடர்ச்சியாக இந்த வேலையை செய்தாலும் என்னுடைய தனித்துவம் தெரிய வேண்டும் என்பதற்காக பேப்பர் பாண்டாவை செய்தேன். அதற்காக இண்டியன் புக் ஆஃப் ரெக்கார்ட்டில் என் படைப்பு இடம் பெற்றுள்ளது. பெண்கள் இந்த மாதிரி கலைப்படைப்பு சம்பந்தமான வேலைகளை அவசியம் கற்றுக் கொள்ள வேண்டும். அது அவர்களுக்கு என தனிப்பட்ட வருமானத்திற்கு வழிவகுக்கும்’’ என்கிறார் ஆர்த்தி ராவத்.

தொகுப்பு: மா.வினோத்குமார்

You may also like

Leave a Comment

19 − 6 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi