ஊத்துக்கோட்டை: திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே எல்லாபுரம் ஒன்றியம் ஏனம்பாக்கம் ஊராட்சியில், அரசு, தனியார் கம்பெனி ஊழியர்கள், விவசாயிகள் என 500க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் குடிநீர் வரி, வீட்டுவரி, தொழில் வரி, சொத்து வரி உள்ளிட்ட பல்வேறு வரி கட்டுவதற்கு ஊராட்சி அலுவலகத்துக்கு வரவேண்டும். ஆனால் ஊராட்சி அலுவலக கட்டிடம் கட்டப்பட்டு 40 ஆண்டுகள் ஆகிறது இதனால் இந்த கட்டிடம் கடந்த 15 வருடங்களாக சேதம் அடைந்து மழைக் காலங்களில் மழைநீர் கசிந்து அலுவலகத்தின் உள்ளே உள்ள முக்கிய கோப்புகள் நனைந்தது கட்டிடம் இடிந்து விழும் நிலையில் பழுதடைந்து காணப்பட்டது.
இந்நிலையில் ஏனம்பாக்கம் ஊராட்சி அலுவலகம் அருகில் உள்ள இ சேவை மைய கட்டிடத்தில் தான் ஊராட்சி அலுவலகம் இயங்கி வருகிறது. இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில்,’’ஏனம்பாக்கம் ஊராட்சி மன்றம் இ – சேவை மையத்தில் தான் செயல்பட்டு வருகிறது. பழைய கட்டிடம் பழுதடைந்து இடிந்து விழக்கூடிய நிலையில் உள்ளது. இதுசம்பந்தமாக பெரியபாளையம் பிடிஓ அலுவலகம், திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்திலும் மனு கொடுத்துள்ளோம். எனவே பழைய ஊராட்சி கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய ஊராட்சி கட்டிடம் கட்ட வேண்டும்’ என்றனர்.