பள்ளிப்பட்டு: ஆர்.கே.பேட்டை அருகே சேதமடைந்த இடிந்து விழும் அபாய நிலையில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என ஊழியர்கள், பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அருகே நாராயணபுரம் ஊராட்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் பலவீனமடைந்து மேற்கூரை சிமெண்ட் பூச்சு பெயர்ந்து, இரும்பு கம்பிகள் துருப்பிடித்து கானப்படுகிறது.
இதனால் அலுவலகத்தில் பணிபுரியும் ஊராட்சி மன்றத் தலைவர், செயலாளர், வார்டு உறுப்பினர்கள் அச்சமடைந்துள்ளனர். பல ஆண்டுகளாக இடிந்து விழும் அபாய நிலையில் உள்ள கட்டிடத்தை சீரமைக்க பலமுறை கோரிக்கை விடுத்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஆய்வுக்கு வந்தபோது, பலவீனமடைந்துள்ள ஊராட்சி மன்ற கட்டிடம் நீர் நிலையில் கட்டப்பட்டுள்ளதால், அதே இடத்தில் புதிய கட்டிடம் கட்ட அனுமதியில்லாததாலும், கிராமத்தில் புதிய கட்டிடம் கட்ட இடம் இல்லாத நிலையில் சிதிலமடைந்துள்ள கட்டிடத்திற்கு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.