அருமனை : பனச்சமூடு புலிக்குளம் பகுதியில் கேரளாவில் இருந்து உணவு கழிவு என்று கூறி பிளாஸ்டிக் கழிவுகளை மூட்டை மூட்டையாக ஏற்றி வந்த மினி டெம்போவை தனிப்பிரிவு காவல் துறையினர் மடக்கிப் பிடித்தனர். அருமனை அருகே பனச்சமூடு புலிக்குளம் பகுதியில் தனிப்பிரிவு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது அவ்வழியாக மினி டெம்போ ஒன்று வந்தது. போலீசார் மினி டெம்போவை தடுத்து நிறுத்தினர். மினி டெம்போவில் சிதறால் பகுதியை சேர்ந்த சஜி(27), நெட்டை கள்ளிமூடு வினிஷ்(18), மற்றும் ஆறாட்டுகுளி குளத்துகரை அஜித்(31) ஆகியோர் இருந்தனர். அவர்களிடம் விசாரித்த போது, நலம்சோலை பகுதியை சேர்ந்த எபனேசர் என்பவருக்கு சொந்தமான பன்றி பண்ணைக்கு கட்டாக்கடை, மலையின் கீழ் மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் கிடைக்கக் கூடிய உணவு கழிவுகளை எடுத்துச் செல்வதாக கூறினர்.
ஆனால் சந்தேகம் அடைந்த போலீசார் மேல் பகுதியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ட்ரம் அகற்றி பார்த்தபோது, மூட்டை மூட்டையாக பிளாஸ்டிக் கழிவுகள் கட்டி வைக்கப் பட்டிருந்தது தெரியவந்தது.இதையடுத்து வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். கேரளா பகுதிகளில் இருந்து தினமும் பல வாகனங்களில் இவ்வாறு பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு வருகின்றனர். இதற்கு சில உயர் அதிகாரிகளும் உடந்தையாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.