ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் ரூ.90.20 கோடி செலவில் மறுசீரமைப்பு பணிகளை இந்திய ரயில்வே வாரிய உறுப்பினர் ஆர்.என்.சுங்கர் துவக்கி வைத்தார். தொடர்ந்துபாம்பன் கடலில் ரூ.525 கோடியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ரயில் பாலத்தை ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘பாம்பன் கடலில் புதிதாக கட்டப்பட்டு வரும் புதிய ரயில் பாலத்தின் பணிகள் 90 சதவீதம் முடிந்துள்ளது. செங்குத்து தூக்குப்பாலத்தின் பணிகளும் விரைவில் முடிவடையும். தனுஷ்கோடி ரயில் போக்குவரத்திற்காக வழித்தடம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தப்பட்டதும், ராமேஸ்வரம் – தனுஷ்கோடி ரயில் போக்குவரத்துக்கான பணிகள் துவங்கப்படும். புதிய ரயில் பாலம் கட்டும் பணிகள் அனைத்தும் முடிவடைந்து, 2024, பிப். 24ம் தேதிக்குள் ரயில் பாலம் திறக்கப்பட்டு ரயில் போக்குவரத்து மீண்டும் துவங்கப்படும். பிரதமர் நரேந்திர மோடி புதிய பாலத்தை திறந்து வைத்து ரயில் போக்குவரத்தை துவக்கி வைப்பார்’’ என்றார்.