காஞ்சிபுரம்: பல்லாவரத்தில் முதல்வர் பங்கேற்கும் திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் திமுகவினர் அணிதிரண்டு வரவேண்டும் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக செயற்குழு உறுப்பினர்கள் அவசர கூட்டம் பல்லாவரம் 200 அடி ரேடியல் சாலையில் உள்ள சுரபி மகால் திருமண மண்டபத்தில் மாவட்ட அவை தலைவர் த.துரைசாமி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணை செயலாளர்கள் இ.கருணாநிதி, எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன், எம்எல்ஏ து.மூர்த்தி மற்றும் மாவட்ட பொருளாளர் வெ.விசுவநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் வரவேற்று பேசினார்.
இதில், காஞ்சிபுரம் எம்பி க.செல்வம், தலைமை தீர்மான குழு செயலாளர் மீ.அ.வைதியலிங்கம், முன்னாள் எம்எல்ஏ வீ.தமிழ்மணி, எஸ்.ஆர்.எல்.இதயவர்மன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஜி.சி.அன்புச்செழியன், க.அன்புச்செல்வன், ஆதிமாறன், காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை ஆ.மனோகரன், செங்கை மாவட்ட ஊராட்சி குழு தலைவர் செம்பருத்தி துர்கேஷ், தாம்பரம் மாநகர மேயர் வசந்தகுமாரி, பகுதி, ஒன்றிய, நகர செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
முடிவில் தீர்மானங்களை விளக்கி அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது: காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் வருகிற 7ம்தேதி மாலை 6 மணியளவில் கண்டோன்மெண்ட் பல்லாவரம் ராஜேந்திரபிரசாத் சாலை தெரேசா பள்ளி அருகில் நடைபெறும் திராவிட மாடல் அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க மாபெரும் பொதுக்கூட்டத்தில், மக்கள் வியந்து பாராட்டும் வகையில் ஈராண்டில் ஈடில்லா சாதனை படைத்து நல்லாட்சி நடத்தி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசுகிறார்.
இதில், காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் உள்ள மாநகர, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர்களில் அடங்கியுள்ள வட்ட திமுக நிர்வாகிகள் பல்லாயிரக்கணக்கில் அணி திரண்டு பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவேண்டும். இதுபோன்ற பொதுக்கூட்டம் நடந்தது இல்லை என திமுக வரலாற்றில் புதிய சாதனை படைத்திடும் வகையில் அலைகடலென வரும் 7ம்தேதி பல்லாவரத்தில் திரள வேண்டும். இவ்வாறு அமைச்சர் கூறியுள்ளார்.