பல்லடம் : பல்லடம் பாரதிபுரம் பகுதியில் மனைவியை சரமாரியாக அரிவாளால் வெட்டிக்கொன்ற கணவர் நேற்று போலீசில் சரண் அடைந்தார். கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பகுதியை சேர்ந்தவர் பாரதிதாசன் (29). இவரது மனைவி நிஷா (27). இவர்களுக்கு 2 மகன், ஒரு மகள் உள்ளனர். இந்த தம்பதி விவசாயம் செய்து வந்தனர். நிஷா தனது பாட்டிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் 15 நாட்களுக்கு முன்பு பல்லடம் பாரதிபுரம் பகுதியில் உள்ள பாட்டி வீட்டிற்கு வந்து தங்கினார்.
அவரை ஊருக்கு அழைத்து செல்ல பாரதிதாசன் நேற்று வந்தார். அப்போது பாரதிதாசனுக்கும், நிஷாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த பாரதிதாசன் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து தலை மற்றும் கை பகுதிகளில் நிஷாவை சரமாரியாக வெட்டினார். நிஷாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு வந்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த நிஷாவை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நிஷா பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் நிஷாவை வெட்டிக்கொன்ற பாரதிதாசன் பல்லடம் போலீசில் சரண் அடைந்தார். இதையடுத்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இச்சம்பவம் பல்லடம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.