ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வழியாகத்தான் மதுரை, வாடிப்பட்டி, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், நத்தம், காரைக்குடி, நாமக்கல், திருச்சி, வத்தலக்குண்டு, ராமேஸ்வரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, வாடிப்பட்டி, சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பாதயாத்திரையாக பக்தர்கள் பழநிக்கு செல்கின்றனர். தைப்பூச திருவிழா நாளை நடைபெற இருப்பதால் நேற்று மட்டும் அதிகாலை முதல் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பாதயாத்திரை பக்தர்கள் ஒட்டன்சத்திரம் வழியாக பழநிக்கு சென்றனர்.
தொடர்ந்து பக்தர்களின் வருகை அதிகமாக இருப்பதால் ஒட்டன்சத்திரம் வழியாக செல்லும் பஸ், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களின் போக்குவரத்து வழித்தடம் மாற்றி அமைக்கப்பட்டு ஒட்டன்சத்திரம் – தாராபுரம் சாலை வழியாக சென்று கள்ளிமந்தயம், தொப்பம்பட்டி சாலையில் பழநி செல்வதற்கு திருப்பி விடப்பட்டுள்ளது.
போக்குவரத்து ஆய்வாளர் ராஜன் தலைமையிலான போலீசார் வாகனங்களை சரிசெய்து மாற்று வழியில் செல்வதற்கு அறிவிப்பு செய்து வருகின்றனர். மேலும் பாதயாத்திரை பக்தர்களின் இரவு நேரங்களில் நடந்து செல்ல வேண்டாம்; நடப்பதற்கு ஒதுக்கியுள்ள நடைபாதையில் செல்லுமாறும் தங்கள் பணம், நகை உடைமைகளை மற்றும் குழந்தைகளை பத்திரமாக தங்கள் பாதுகாப்பில் கொண்டு செல்லுமாறு அறிவிப்பு செய்து வருகின்றனர்.