திண்டுக்கல்: பழனி தண்டாயுதபாணி கோயிலில் வி.ஐ.பி. தரிசனத்திற்கு நேரம் ஒதுக்கப்படுவது தொடர்பாக ஆட்சேபனை இருந்தால் பக்தர்கள் தெரிவிக்கலாம் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பழனியில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தண்டாயுதபாணி கோயிலில் நாள்தோறும் பல்லாயிர கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர். கூடத்திற்கு இடையே பக்தர்கள் விரைவாக சாமி தரிசனம் செய்ய கோயில் நிர்வாகம் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது.
ஆனால், வி.ஐ.பி-க்கள் தரிசனம் செய்ய வாரும் நேரத்தில் மற்ற பக்தர்களின் தரிசனத்திற்கு இடையூறு ஏற்படுவதாக புகார்கள் எழுந்தது. இந்நிலையில் வி.ஐ.பி-கள் தரிசனம் செய்வதற்கு மாலை 3 மணி முதல் 4 மணி வரை நேரம் ஒதுக்கவும், அந்த சமயத்தில் மற்ற பக்தர்களில் தரிசனத்தை நிறுத்தி வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தை பூசம், பங்குனி உத்திரம், கிருத்திகை உள்ளிட்ட 44 விஷேச நாட்களை தவிர்த்து மற்ற நாட்களில் வி.ஐ.பி. தரிசனத்தை அமல்படுத்தவும், ஒரு நபருக்கு ரூ.300 கட்டணம் வசூல் செய்யவும் முடிவு எடுக்கப்பட்டது. வி.ஐ.பி. தரிசன நேர ஒதுக்கீடு திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக பக்தர்கள், பொதுமக்கள் தங்கள் ஆட்சேபனை மற்றும் கருத்துக்களை கோயில் நிர்வாகத்திடம் தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.