பாலக்காடு : பாலக்காடு அருகே கொடுந்திரப்புள்ளி அக்ரஹாரம் அமைந்துள்ளது. இங்குள்ள ஐயப்பப்பெருமாள் கோவிலில் நவராத்திரி திருவிழா வெகுசிறப்பாக நடைபெற்றது.
கோவிலில் கடந்த 9 நாட்களும் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்று வந்தன. மகாநவமி நாளான நேற்று முன்தினம் 15 யானைகள் அலங்கார அணிவகுப்புடன் உற்சவர் யானை மீது, பஞ்சவாத்யம், சிங்காரி மேளம், நாதஸ்வரம் முழங்க பவனி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
ஊர்வலத்தில் கரக்காட்டம், காவடியாட்டம், மயிலாட்டம் என இசைக் கலைஞர்களின் நடன ஆட்டங்கள் இடம்பெற்றிருந்தன. கோவில் அருகிலுள்ள கால்பந்து மைதானத்தில் 15 யானைகள் அலங்காரத்துடன் அணிவகுத்து நின்று யானைகள் மீது முத்துமணிக்குடை மாற்றம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.இதை தொடர்ந்து கோயிலில் இன்று வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்து. இதில் ஏராளமான குழந்தைகள் கலந்து கொண்டு நாவில் ஹரி முதலெழுத்து எழுதி தங்களது கல்வியை தொடங்கினர்.