பாலக்காடு : பாலக்காடு மாவட்டம் மங்கலம் டேம் அருகே காட்டு மாட்டின் அட்டகாசத்தால் 3 பேர் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து விவசாயிகள் சங்கத்தினர் தீப்பந்தம் ஏந்தி நேற்று போராட்டம் நடத்தினர்.கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம், கணமலை அருகே அட்டிவளவு பகுதியில் காட்டு மாடு ஊருக்குள் புகுந்து விவசாயிகள் தோமஸ் அந்தோணி (63), சாக்கோ (எ) ஜேக்கப் தாமஸ் (68) ஆகியோரை முட்டிமோதி தாக்கியது. இதனால் இப்பகுதியை சேர்ந்த மக்கள் எருமேலி சாலை சந்திப்பில் போராட்டம் நடத்தினர். இதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் டாக்டர் பி.கே.ஜயஸ்ரீ காட்டு மாட்டை கண்டால் உடனடியாக சுட்டுக் கொல்லுமாறு, அதிரடியாக உத்தரவிட்டார்.
மேலும் தலைமை வனவிலங்கு வார்டன் கங்காசிங்க், மயக்க ஊசி செலுத்தி காட்டு மாட்டை பிடிப்பதற்கு உத்தவிட்டுள்ளார். வனத்துறை அதிகாரிகளும் காவலர்களும் ஒருங்கிணைந்து 50 பேர் காட்டு மாட்டை தீவிரமாக தேடி வருகின்றனர். காட்டு மாட்டால் உயிரிழப்பு ஏற்பட்ட குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் வீதம் முதற்கட்ட நிதியுதவியை கேரள மாநில அரசு வழங்கியுள்ளது. இதையடுத்து இரண்டாவது கட்டமாக 5 லட்சம் ரூபாய் ஆவணங்கள் சரிபார்த்து வழங்கப்படவுள்ளது.
கொல்லம் ஆயூரில் காட்டுமாடு முட்டி சாமூவேல் வர்கீஸ் என்பவர் உயிரிழந்தார். மொத்தம் மூன்று பேர் காட்டு மாடுகள் தாக்கி உயிரிழந்தனர். இந்நிலையில் இச்சம்பவத்தை கண்டித்து பாலக்காடு மாவட்டம் மங்கலம் அணை பகுதியில் மாநில விவசாயிகள் சங்கத்தினர் தீப்பந்தம் ஏந்தி போராட்டம் நடத்தினர். மேலும் பொதுமக்கள் உயிருக்கு வனவிலங்குகளிடம் இருந்து பாதுகாப்பு வழங்க வேண்டும், விவசாய நிலங்களுக்கு பாதுகாப்பு வேண்டும். மின் வேலிகள் சரிவர பயன்படுத்தப்படுவதில்லை, வனவிலங்குகளால் விவசாய பயிர்கள் சேதமடைந்தவர்களுக்கு நிதியுதவி வழங்கவேண்டும் என பொன்கண்டம், கடப்பாறை, ஒலிப்பாறை, மங்கலம் டேம், குளிக்கடவு, இரண்டாம்புழா, சூருபாறை ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.