*கலெக்டரிடம் பொட்டல் கிராம மக்கள் மனு
நெல்லை : கனமழை வெள்ளத்தால் துண்டிக்கப்பட்ட பாலம் மற்றும் சாலையினை சீரமைக்கக் கோரி கீழநத்தம் பொட்டல் பகுதி மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
பாளையங்கோட்டை அருகேயுள்ள கீழநத்தம் பொட்டல் ஊர் பொதுமக்கள் அளித்த மனு விவரம்: நெல்லை வண்ணார்பேட்டை – வெள்ளக்கோயில் தாமிரபரணி கரையோர இணைப்புச் சாலையானது, தீப்பாச்சியம்மன் கோயில் வழியாக மணப்படைவீடு சாலையில் முடிவடைகிறது.
இந்த சாலையை பொட்டல், வெள்ளக்கோயில், கீழநத்தம் பகுதியைச் சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் பொட்டல் பகுதியில் இறந்தவர்களின் உடல்களை நல்லடக்கம் செய்ய இந்த சாலை வழியாக தான் சுடுகாட்டுக்கு செல்ல வேண்டும்.
சமீபத்தில் தாமிரபரணியில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுடுகாட்டுக்கு முன்பாக உள்ள கான்கிரீட் பாலம் மற்றும் சாலை முற்றிலுமாக சேதம் அடைந்து துண்டிக்கப்பட்டது. இதனால் எங்கள் ஊர் பொதுமக்களும், மாணவ, மாணவிகளும் 10 கி.மீ., சுற்றி வண்ணார்பேட்டைக்கு செல்ல வேண்டியுள்ளது. இறந்தவர்களின் உடலைகளை நல்லடக்கம் செய்ய 2 கி.மீ., தூரம் தண்ணீரில் சுமந்து செல்ல வேண்டியுள்ளது. எனவே துண்டிக்கப்பட்ட பாலம் மற்றும் சாலையை சீரமைத்துத் தர கேட்டுக் கொள்கிறோம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.