புதுடெல்லி: இந்தியாவில் நடைபெற உள்ள ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரில் பங்கேற்க உள்ள பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு விசா வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. இது குறித்து பாக். கிரிக்கெட் வாரியம் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியதுடன் தங்கள் வீரர்களுக்கு உடனடியாக விசா கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐசிசி) கடிதம் அனுப்பியது.
பாகிஸ்தான் வீரர்கள் இந்தியா புறப்படுவதற்கு 2 நாள் அவகாசமே இருந்த நிலையில், அவர்களுக்கான விசாவை இந்திய அரசு அங்கீகரித்து உள்ளதாக ஐசிசி நேற்று உறுதி செய்தது. உலக கோப்பைக்கு முன்பாக 2 பயிற்சி ஆட்டங்களில் விளையாட உள்ள பாகிஸ்தான் அணி ஐதராபாத்தில் செப்.29ம் தேதி நியூசிலாந்து அணியையும், அக்.3ம் தேதி ஆஸ்திரேலியாவையும் சந்திக்கிறது.