சென்னை: மேலடுக்கு சுழற்சியால் இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது. கோடை மழை பரவலாக பெய்யத் தொடங்கியுள்ளதால், தொடர்ந்து வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. இதற்கு காரணம், எல் நினோ தாக்கத்தால் வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்து வருவதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர். எல்நினோ தாக்கம் தற்போது படிப்படியாக வலுவிழந்து வரும் சூழலில் அதன் இறுதிக்கட்ட தாக்கத்தால் வெப்பம் கடுமையாக அதிகரித்ததாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. அதேபோன்று, 13ம்தேதி முதல் 17ம்தேதி வரை தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் மற்ற இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.