உதகை: ஓவேலி பேரூராட்சி கவுன்சிலர் மண்டபசாஜியை வனத்துறையினர் ஒருநாள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கடந்த அக்டோபர்.19ம் தேதி காட்டேரி அணைப்பகுதியில் துப்பாக்கி குண்டு பட்டு காட்டெருமை உயிரிழந்தது. குந்தா வனத்துறையினர் விசாரணை நடத்தியதில் கூடலூரைச் சேர்ந்த கும்பலுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. தனிப்படை அமைத்து விசாரித்ததில் சிபு, சதீஷ், சுரேஷ் ஆகியோர் கடந்த டிச.6ம் தேதி கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் மண்டபசாஜி கள்ளத் துப்பாக்கி வாங்கி கொடுத்தது தெரியவந்தது. நீலகிரியில் காட்டெருமைகளை வேட்டையாட கள்ளத் துப்பாக்கி வாங்கித் தந்ததாக ஓவேலி பேரூராட்சி கவுன்சிலர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஓவேலி பேரூராட்சி கவுன்சிலர் மண்டபசாஜியை வனத்துறையினர் ஒருநாள் காவலில் விசாரிக்க அனுமதி அளித்த நிலையில் மண்டபசாஜியை நாளை மாலை 6 மணிக்கு வனத்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.