சின்னமனூர்: குச்சனூரில் உள்ள சனீஸ்வர பகவான் கோயில் நிர்வாகத்தை பரம்பரை டிரஸ்டிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, மேல்முறையீடு செய்ய இருந்து அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது. தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே, குச்சனூரில் 500 ஆண்டு பழமையான சுயம்பு சனீஸ்வர பகவான் திருக்கோயில் உள்ளது.
இக்கோயிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோயிலில், ஆண்டுதோறும் ஆடி மாத பெருந்திருவிழா விமரிசையாக நடக்கும். இக்கோயில் நிர்வாகத்தை 7 பேர் கொண்ட பரம்பரை அறங்காவலர் டிரஸ்டிகள் நடத்தி வந்தனர். டிரஸ்டிகளுக்கு இடையே ஏற்பட்ட பிரச்னையை தொடர்ந்து, கடந்த 2003 மார்ச் 25ம் தேதி, கோயில் நிர்வாகத்தை இந்து அறநிலையத்துறை ஏற்றது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பரம்பரை அறங்காவலர்கள் குழுவில் இருக்கும் திருமலைமுத்து மற்றும் தீபன் ஆகியோர் ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் கடந்த 20 ஆண்டுகளாக நடந்து வந்தது. இந்நிலையில், இந்த வழக்கை நேற்று விசாரித்த ஐகோர்ட் நீதிபதி ஸ்ரீமதி, ‘குச்சனூர் சனீஸ்வர பகவான் திருக்கோயில் நிர்வாகத்தை 7 பேர் கொண்ட பரம்பரை அறங்காவல் குழுவினரிடம் ஒப்படைக்க வேண்டும்’ என்றார். மேலும், உத்தரவிட்ட 4 வாரத்திற்குள் கோயில் நிர்வாகத்தை பரம்பரை அறங்காவலர் குழுவிடம் இந்து அறநிலையத்துறையிடன் ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்நிலையில், மேல்முறையீடு செய்ய உள்ளதாக இந்து அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.